பொது மாநாடு
ஒரு சபைக்கான தேவை
அக்டோபர் 2021 பொது மாநாடு


ஒரு சபைக்கான தேவை

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலோடும் அதிகாரத்தோடும் சபையின் தோற்றம் மற்றும் தேவையை வேதங்கள் தெளிவாகக் கற்பிக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் உறுப்பினரான மூப்பர் மார்க் ஈ. பீட்டர்சன் இந்த உதாரணத்துடன் ஒரு செய்தியைத் தொடங்கினார்:

“கென்னத்தும் அவரது மனைவி லூசிலும் நல்ல மனிதர்கள், நேர்மையானவர்கள் மற்றும் தலைநிமிர்ந்தவர்கள். அவர்கள் சபைக்குச் செல்வதில்லை, அது இல்லாமல் அவர்கள் நன்றாக இருக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நேர்மை மற்றும் நல்லொழுக்கத்தைக் கற்பிக்கிறார்கள், சபை தங்களுக்காகச் செய்பவை இவைதான் என அவர்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள்.

“எப்படியிருந்தாலும், குடும்ப பொழுதுபோக்கிற்காக தங்களுக்கு வார இறுதி தேவை என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள் … [மற்றும்] சபைக்குச் செல்வது உண்மையில் அவர்களின் வழியில் குறுக்கிடும்.”1

இன்று, தங்கள் சபைகளில் கலந்துகொள்வதையோ அல்லது பங்கேற்பதையோ நிறுத்திய நல்ல மற்றும் மத எண்ணம் கொண்டவர்களைப்பற்றியது எனது செய்தி.2 நான் “சபைகள்,” என்று கூறும்போது, ஜெப ஆலயங்கள், மசூதிகள் அல்லது பிற மத அமைப்புகளை நான் சேர்க்கிறேன். இவை அனைத்திலும் வருகை கணிசமாக, நாடு தழுவிய அளவில் குறைந்துள்ளதால் நாம் அக்கறை கொள்கிறோம்.3 எந்தவொரு காரணத்திற்காகவும் நமது சபைகளை மதிப்பிடுவதை நிறுத்தினால், நாம் நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையை அச்சுறுத்துகிறோம், மேலும் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் தேவனிடமிருந்து தங்களைப் பிரிப்பது நம் தேசங்கள் மீது அவருடைய ஆசீர்வாதங்களைக் குறைக்கிறது.

சபைக்கு வருவதும் செயல்பாடும் நம்மை சிறந்த மனிதர்களாகவும் மற்றவர்களின் வாழ்க்கையில் சிறந்த செல்வாக்குகளை ஏற்படுத்தவும் உதவுகின்றன. சபையில் மதக் கொள்கைகளை எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குக் கற்பிக்கப்படுகிறது. நாம் ஒருவருக்கொருவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். ஒரு பிரசங்கத்தை விட ஒரு தூண்டக்கூடிய உதாரணம் மிகவும் வல்லமை வாய்ந்தது. ஒத்த எண்ணம் கொண்ட மற்றவர்களுடன் இணைவதன் மூலம் நாம் பலப்படுத்தப்படுகிறோம். சபைக்கு வருதல் மற்றும் பங்கேற்பில், நம் இருதயங்கள், வேதாகமம் சொல்வது போல், “அன்பால் பிணைக்கப்படுகிறது”.4

I.

வேதாகமத்தில் கிறிஸ்தவர்களுக்கு தேவன் கொடுத்த வேதங்களிலும் தற்கால வெளிப்பாட்டிலும் ஒரு சபைக்கான தேவையை தெளிவாகக் கற்பிக்கின்றன. இரண்டும் இயேசு கிறிஸ்து ஒரு சபையை அமைத்ததையும், அவருக்குப் பிறகு ஒரு சபை தனது வேலையைத் தொடரும் என்று நினைத்ததையும் காட்டுகின்றன. அவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அழைத்து அதை வழிநடத்தும் அதிகாரத்தையும் திறவுகோல்களையும் கொடுத்தார். கிறிஸ்து “சபையின் தலைவர்” என்று வேதாகமம் கற்பிக்கிறது5 மற்றும் “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமான சபையானது பக்தி விருத்தி அடைவதற்காகவும்” அதன் அலுவலர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.6 நிச்சயமாக ஒரு சபையின் தோற்றம் மற்றும் இப்போது அதன் தேவை குறித்து வேதாகமம் தெளிவாக உள்ளது.

சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது தங்களுக்கு உதவாது என்று சிலர் கூறுகிறார்கள். சிலர், “நான் இன்று எதையும் கற்றுக்கொள்ளவில்லை” அல்லது “யாரும் என்னிடம் நட்பாக இல்லை” அல்லது “நான் புண்படுத்தப்பட்டேன்” என்று கூறுகிறார்கள். தனிப்பட்ட ஏமாற்றங்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டிலிருந்து நம்மை ஒருபோதும் தடுக்கக்கூடாது, அவர் நமக்கு சேவை செய்ய கற்றுக்கொடுத்தார், சேவை செய்யப்படவல்ல.7 இதைக் கருத்தில் கொண்டு, மற்றொரு உறுப்பினர் தனது சபை வருகையின் முக்கியத்துவத்தை விவரித்தார்:

“பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் சபைக்கு செல்வதுபற்றிய எனது அணுகுமுறையை மாற்றினேன். இனி நான் என் பொருட்டு சபைக்குச் செல்ல மாட்டேன், ஆனால் மற்றவர்களைப்பற்றி நினைக்க. தனியாக அமர்ந்திருக்கும் மக்களுக்கு வணக்கம் தெரிவிப்பதற்கும், விருந்தினர்களை வரவேற்பதற்கும், … ஒரு பணிக்காக தன்னார்வத் தொண்டாற்றுவதற்கும் நான் முடிவெடுத்தேன். …

“சுருக்கமாக, ஆர்வமாக இருக்க வேண்டும் , , செயலற்றவராக இருக்கக்கூடாது, மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்”8 என்ற எண்ணத்துடன் நான் ஒவ்வொரு வாரமும் சபைக்குச் செல்கிறேன்.

படம்
சபையில் வரவேற்றல்

தலைவர் ஸ்பென்சர் டபுள்யூ. கிம்பல் போதித்தார், “பொழுதுபோக்கிற்கோ அல்லது அறிவுறுத்தப்படுவதற்கோ நாம் ஓய்வுநாள் கூட்டங்களுக்கு செல்வதில்லை. நாம் கர்த்தரை ஆராதிக்கச் செல்கிறோம். இது ஒரு தனிப்பட்ட பொறுப்பு. … ஆராதனை உங்களுக்கு தோல்வி என்றால், நீங்கள் தோல்வியடைந்தீர்கள். உங்களுக்காக யாரும் ஆராதிக்க முடியாது; நீங்கள் கர்த்தருக்காக உங்கள் சொந்தக் காத்திருப்பைச் செய்ய வேண்டும்.”9

சபை வருகை நம் இருதயங்களைத் திறந்து நம் ஆத்துமாக்களைப் பரிசுத்தமாக்க முடியும்.

படம்
தொகுதி ஆலோசனைக்குழு கூட்டம்

ஒரு சபையில் நாம் தனியாக அல்லது நம் விருப்பப்படி அல்லது நமது வசதிக்காக சேவை செய்வதில்லை. நாம் வழக்கமாக ஒரு குழுவில் பணியாற்றுவோம். சேவையில் பரலோகத்தால் அனுப்பப்பட்ட வாய்ப்புகள் நம் காலத்து தனிமனித தன்மையை விட உயர்வானது என நாம் காண்கிறோம். சபை வழிநடத்தும் சேவை, நமது ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கும் தனிப்பட்ட சுயநலத்தை மேற்கொள்ள உதவுகிறது.

சுருக்கமாக கூட குறிப்பிட வேண்டிய மற்ற முக்கிய பிற நன்மைகள் உள்ளன. சபையில் நாம் தேவனுக்கு சேவை செய்ய முயலும் அற்புதமான மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறோம். நமது மத நடவடிக்கைகளில் நாம் தனியாக இல்லை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. நம் அனைவருக்கும் மற்றவர்களுடன் தொடர்பு தேவை, சபை தொடர்புகள் நமக்கும் நம் தோழர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நாம் அனுபவிக்கக்கூடிய சில சிறந்தவைகளாகும். குறிப்பாக பிள்ளைகள் மற்றும் விசுவாசமுள்ள பெற்றோர்களுக்கிடையில் அந்த தொடர்புகள் இல்லாமல், பெற்றோர்கள் தங்கள் விசுவாசத்தில் பிள்ளைகளை வளர்ப்பதில் கஷ்டங்கள் அதிகரித்து வருவதை ஆராய்ச்சி காட்டுகிறது.10

II.

இதுவரை, நான் பொதுவாக சபைகளைப்பற்றி பேசினேன். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் அங்கத்தினரத்துவம், வருகை மற்றும் பங்கேற்புக்கான சிறப்பு காரணங்கள்பற்றி இப்போது நான் உரையாற்றுகிறேன்.

படம்
சால்ட் லேக் ஆலயம்

நாம், நிச்சயமாக, பண்டைய மற்றும் தற்கால வேதங்கள், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழும் அதிகாரத்தோடும் இயக்கப்பட்ட ஒரு சபையின் தோற்றம் மற்றும் தேவையை தெளிவாகக் கற்பிக்கின்றன என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை அவருடைய கோட்பாட்டின் முழுமையை கற்பிப்பதற்காகவும், தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதற்குத் தேவையான நியமங்களைச் செய்வதற்கு அவருடைய ஆசாரியத்துவ அதிகாரத்துடன் பணியாற்றுவதற்காகவும் நிறுவப்பட்டது என்பதையும் நாங்கள் சாட்சியளிக்கிறோம்.11 சபை வருகையை மறந்து தனிப்பட்ட ஆவிக்குரிய தன்மையை மட்டுமே சார்ந்திருக்கும் உறுப்பினர்கள் இந்த சுவிசேஷ அத்தியாவசியங்களிலிருந்து, அதாவது ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் ஆசீர்வாதங்கள், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட கோட்பாட்டின் முழுமை மற்றும் அந்த கோட்பாட்டை பயன்படுத்துவதற்கான உந்துதல்கள் மற்றும் வாய்ப்புகளிலிருந்து தங்களை பிரித்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தின் நித்திய நிரந்தரத்திற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழக்கிறார்கள்.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், அது நமக்கு ஆவிக்குரிய ரீதியில் வளர உதவுகிறது. வளர்ச்சி என்றால் மாற்றம். ஆவிக்குரிய அடிப்படையில் இது மனந்திரும்புதல் மற்றும் கர்த்தரிடம் நெருங்க முற்படுவதாகும். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் நாம் மனந்திரும்புவதற்கு உதவும் கோட்பாடு, நடைமுறைகள் மற்றும் உணர்த்தப்பட்ட உதவியாளர்கள் உள்ளனர். அவர்களின் நோக்கம், உறுப்பினர் ஆலோசனைக் குழுக்களில் கூட, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவு போல் தண்டனை அல்ல. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் சாத்தியமான மன்னிப்பின் இரக்கத்துக்குத் தகுதிபெற சபை உறுப்பினர் குழுக்கள் அன்புடன் நமக்கு உதவி செய்ய நாடுகிறார்கள்.

படம்
தம்பதி ஊழியக்காரர்கள்
படம்
ஆலயத்தை நோக்கி நடத்தல்

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையால் வழங்கப்பட்ட சுயநலமற்ற சேவைக்கான உந்துதலையும் கட்டமைப்பையும் தனிப்பட்ட ஆவிக்குரிய தன்மை வழங்க முடியாது. ஊழிய அழைப்புகளை ஏற்க தங்கள் பள்ளி அல்லது ஓய்வூதிய நடவடிக்கைகளை ஒதுக்கி வைக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மற்றும் மூத்தவர்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள். அவர்கள் தேர்ந்தெடுக்காத அறிமுகமில்லாத இடங்களில் அவர்கள் அந்நியர்களுக்கு ஊழியக்காரர்களாக வேலை செய்கிறார்கள். “ஆலயப் பணி” என்று நாம் அழைக்கும் தன்னலமற்ற சேவையில் பங்கேற்கும் விசுவாசமிக்க உறுப்பினர்களுக்கும் இதுவே உண்மை. சபைக்கு ஆதரவளித்து, ஸ்தாபித்து, அதை வழிநடத்தாமல் அத்தகைய சேவை எதுவும் சாத்தியமில்லை.

நமது உறுப்பினர்களின் மத விசுவாசமும் சபை சேவையும் பெரிய சமுதாயத்திற்கு பயனளிக்கும் ஒத்துழைப்பு முயற்சிகளில் எவ்வாறு பணியாற்றுவது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அந்த மாதிரியான அனுபவமும் வளர்ச்சியும் நமது தற்போதைய சமூகத்தின் நடைமுறைகளில் பரவலாக இருக்கும் தனித்துவத்தில் நடப்பதில்லை. நமது உள்ளூர் தொகுதிகளின் புவியியல் அமைப்பில், நமக்குக் கற்றுக்கொடுக்கிற மற்றும் நம்மைச் சோதிக்கும், மற்றபடி நாம் தேர்ந்தெடுக்காத நபர்களுடன் நாம் இணைந்து பணியாற்றுகிறோம்.

அன்பு, மனதுருக்கம், மன்னிப்பு மற்றும் பொறுமை போன்ற ஆவிக்குரிய குணங்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இது மிகவும் மாறுபட்ட பின்னணி மற்றும் முன்னுரிமைகளைக் கொண்ட நபர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பதை அறிய இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த அனுகூலம் நமது பல உறுப்பினர்களுக்கும் அவர்களின் பங்கேற்பால் ஆசீர்வதிக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கும் உதவியிருக்கிறது. பிற்காலப் பரிசுத்தவான்கள் கூட்டுறவு முயற்சிகளில் தலைமையேற்று மற்றும் ஒன்றிணைக்கும் திறனுக்காக புகழ் பெற்றவர்கள். அந்த பாரம்பரியம் நமது தைரியமிக்க, இன்டர்மவுண்டன் மேற்கில் குடியேறி, மற்றும் பொது நலனுக்காக சுயநலமற்ற ஒத்துழைப்பின் மதிப்புமிக்க பாரம்பரியத்தை நிறுவிய, முன்னோடிகளிடமிருந்து தோன்றியது.

படம்
உதவும் கரங்கள் திட்டம்

தனிநபர் வளங்களை பெரிய அளவில் சேகரித்து நிர்வகிப்பதன் மூலம் பெரும்பாலான மனிதாபிமான மற்றும் தொண்டு முயற்சிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை உலகெங்கிலும் அதன் மகத்தான மனிதாபிமான முயற்சிகளுடன் இதைச் செய்கிறது. கல்வி மற்றும் மருத்துவப் பொருட்கள், பசிக்கு உணவளித்தல், அகதிகளைப் பராமரித்தல், போதைப்பொருட்களுக்கு அடிமையாவதன் விளைவுகளை மாற்ற உதவுதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. நமது சபை உறுப்பினர்கள் இயற்கை பேரழிவுகளில் தங்கள் உதவி கரங்கள் திட்டங்களுக்கு புகழ் பெற்றவர்கள். சபை அங்கத்தினரத்தும் இத்தகைய பெரிய அளவிலான முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்க நம்மை அனுமதிக்கிறது. உறுப்பினர்கள் அவர்கள் மத்தியிலிருக்கும் ஏழைகளுக்கு உதவ உபவாச காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள்.

படம்
திருவிருந்தில பங்கேற்றல்

பரிசுத்த ஆவியின் தோழமை மூலம் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் உணருவதோடு மட்டுமல்லாமல், நமது சபையில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் ஞான வார்த்தையை கைக்கொள்ளுதலின் ஆசீர்வாதம் மற்றும் தசமபாகத்தின் நியாயப்பிரமாணத்தை கடைபிடிப்பதற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பொருள்சார்ந்த மற்றும் ஆவிக்குரிய செழிப்பு போன்ற சுவிசேஷ வாழ்வின் பலன்களை அனுபவிக்கிறார்கள். உணர்த்தப்பட்ட தலைவர்களின் ஆலோசனையின் ஆசீர்வாதமும் நமக்கு உள்ளது.

இவை அனைத்துக்கும் கிரீடமாக ஒவ்வொரு ஓய்வு நாளிலும் நாம் பெறும் திருவிருந்து உட்பட நித்தியத்திற்கு தேவையான அதிகாரமுள்ள ஆசாரியத்துவ நியமங்கள் உள்ளன. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் உச்சக்கட்ட கட்டளை என்பது திருமணத்தின் நித்திய உடன்படிக்கையாகும், இது மகிமையான குடும்ப உறவுகளை நிலைநிறுத்துவதை சாத்தியமாக்குகிறது. தலைவர் ரசல் எம். நெல்சன் இக்கொள்கையை நினைவுகூரத்தக்க வகையில் போதித்தார். அவர் சொன்னார்: “தேவனின் சமூகத்துக்கு நாம் விரும்பும் வழியை நாம் அமைக்க முடியாது. [அந்த ஆசீர்வாதம்] முன்னறிவிக்கப்பட்ட நியாயப் பிரமாணங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்.”12

அந்த நியாயப்பிரமாணங்களில் ஒன்று ஒவ்வொரு ஓய்வு நாளிலும் சபையில் ஆராதிப்பது.13 நமது ஆராதனை மற்றும் நித்திய கொள்கைகளின் பயன்பாடு நம்மை தேவனிடம் நெருக்கமாக கொண்டு செல்கிறது மற்றும் நேசிக்கும் திறனை மேம்படுத்துகிறது. ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி இந்த கொள்கைகளை விளக்கியபோது அவர் எப்படி உணர்ந்தார் என்பதை இந்த ஊழியக்காலத்தின் முதல் அப்போஸ்தலர்களில் ஒருவரான பார்லி பி. பிராட் விவரித்தார்: “தேவன் உண்மையில் என் பரலோக பிதா என்று நான் உணர்ந்தேன்; இயேசு என் சகோதரர் என்றும், என் உள்ளத்தின் மனைவி அழியாத, நித்திய தோழர் என்றும்: ஒரு அன்பான, எனக்கு ஆறுதலாகவும், மகிமையின் கிரீடமாகவும் என்றென்றும் வழங்கப்பட்ட ஊழியம் செய்யும் தேவதை என்றும் உணர்ந்தேன். சுருக்கமாக, நான் இப்போது ஆவியுடனும் புரிதலுடனும் நேசிக்க முடியும்.”14

முடிவில், ஒரு சபையின் மூலம் மட்டுமே நல்லது செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை என்பதை நான் நினைவூட்டுகிறேன். ஒரு சபையிலிருந்து சுயமாக, மில்லியன் கணக்கான மக்கள் எண்ணற்ற நல்ல செயல்களை ஆதரிப்பதையும் செய்வதையும் பார்க்கிறோம். தனித்தனியாக, பிற்காலப் பரிசுத்தவான்கள் அவற்றில் பலவற்றில் பங்கேற்கிறார்கள். “உலகத்திற்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆவி ஒளியைக் கொடுக்கிறது” என்ற நித்திய சத்தியத்தின் வெளிப்பாடாக இந்தப் பணிகளை நாம் பார்க்கிறோம்.15

சபை இல்லாமல் நிறைவேற்றக்கூடிய நல்ல செயல்கள் இருந்தபோதிலும், கோட்பாட்டின் முழுமை மற்றும் அதன் இரட்சிக்கும் மற்றும் மேன்மைப்படுத்தும் நியமங்கள் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் மட்டுமே கிடைக்கின்றன. கூடுதலாக, சபைக்கு வருவது மற்ற விசுவாசிகளுடன் தொடர்புகொள்வதிலிருந்தும், உடன்படிக்கை பாதையில் இருக்கவும் கிறிஸ்துவின் சிறந்த சீஷர்களாகவும் இருக்க முயற்சிப்பவர்களுடன் சேர்ந்து ஆராதிப்பதிலிருந்தும் வருகிற விசுவாசத்தின் வலிமையையும் மேம்பாட்டையும் தருகிறது. தேவனின் அனைத்து வரங்களிலும் மிகப் பெரியதான, நித்திய ஜீவனை நாம் நாடும்போது, இந்த சபை அனுபவங்களில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.