பொது மாநாடு
செயல்படவும் மாறவும் விசுவாசம்
அக்டோபர் 2021 பொது மாநாடு


செயல்படவும் மாறவும் விசுவாசம்

ஜெபம் மற்றும் வேதப் படிப்பு மற்றும் செயலின் மூலமாக, பரலோகத்தின் ஆசீர்வாதங்களை நம்மால் திறக்கமுடிந்து, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சிறந்த பின்பற்றுபவர்களா மாற முடியும்.

எழுபதின்மர் பொது அதிகாரியாக சேவை செய்ய நான் அழைக்கப்பட்ட உடனேயே, ஒரு சில நிமிடங்களுக்கு தலைவர் ரசல் எம்.நெல்சனை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சிற்றுண்டிச்சாலையில் இது, திட்டமிடப்படாத சந்திப்பாக இருந்தது, மேலும் மூப்பர் எஸ். மார்க் பால்மரையும் என்னையும் அவருடன் மதிய உணவை அருந்த அழைக்கிற அளவுக்கு அவர் அன்பாயிருந்தார்.

“தீர்க்கதரிசியுடன் உணவருந்தும்போது நாம் எதைப்பற்றி பேசுவோம்?” என்பதே என் மனதிற்குள் வந்த சிந்தனை. எனவே, நான் எனது அழைப்பை இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் எனக்கு அவரிடமிருந்து ஏதாவது ஆலோசனையும் வழிகாட்டுதலும் இருக்கிறதா என்று தலைவர் நெல்சனிடம் கேட்க நான் முடிவு செய்தேன். அவருடைய பதில் மிக எளிமையாகவும் நேரடியாகவுமிருந்தது; அவர் என்னைப் பார்த்துச் சொன்னார், “மூப்பர் ஸ்மெய்ல், நீங்கள் என்னவாக மாறவேண்டுமென்பதற்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.” நான் என்னவாக வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைப்பற்றி சிந்தித்து அந்த அனுபவத்திலிருந்து நான் விலகிச் சென்றேன். இதைப்பற்றி நான் சிந்தித்தபோது, ஒரு சிறந்த கணவராக, தகப்பனாக, மகனாக, ஒரு சிறந்த வேலைக்காரனாக நான் மாறவேண்டுமென அவர் விரும்புகிறார் என்பதை நான் உணர்ந்தேன். இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு சிறந்த சீஷனாய் மாற நான் முயற்சிக்கும்போது, இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன்.

கடந்த பொது மாநாட்டில் தலைவர் நெல்சன் சொன்னார்: “எதையும் நன்றாக செய்ய முயற்சி தேவை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாக மாறுவதும் விதிவிலக்கல்ல.”1 இயேசு கிறிஸ்துவின் சிறந்த சீஷர்களாய் மாற கடினமாக உழைக்க தலைவர் நெல்சன் நம்மை அழைக்கிறார். மற்ற காரியங்களுக்கு மத்தியில் இரட்சகரைப் போல மாற, கேட்பதால், செயல்படுவதால் மற்றும் படிப்பதன் மூலம் நம் விசுவாசத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார்.

1.கேளுங்கள்

“ உதவிக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் பரலோக பிதாவிடம் கேட்கவும்” என அவர் சொன்னார்.2 எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் சிறந்த சீஷர்களாய் மாறுவதென்பதை அறிய ஜெபத்தின் மூலம் கேட்பது திறவுகோல்களில் ஒன்று.

அமெரிக்காவில் நேபியர்களுக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் முடிவில் அவர் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார். பின்னர், அவருடைய சீஷர்கள் ஏகமாய்க் கூடி, வல்லமையான ஜெபத்திலும் உபவாசத்திலும் இணைந்திருந்தார்கள். அவர்கள் அவருடைய நாமத்தில் பிதாவினிடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்ததால் இயேசு மறுபடியும் தம்மையே அவர்களிடத்தில் காண்பித்தார்.”3 இயேசு மறுபடியும் ஏன் தம்மையே அவருடைய சீஷர்களிடத்தில் காண்பித்தார்? ஏனெனில் அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் அவர் சொன்னார்:

“இப்பொழுது நான் பிதாவினிடத்திற்குப் போகிறேன். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் நீங்கள் கேட்கிற காரியங்கள் எதுவாய் இருந்தாலும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

“ஆதலால் கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும், ஏனெனில் கேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”4

கர்த்தருடைய சித்தத்தை அறிய விசுவாசத்தில் நாம் கேட்கவேண்டும், நமக்கு எது சிறப்பானதென்பதை கர்த்தர் அறிகிறார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

2. செயல்படுங்கள்

இயேசு கிறிஸ்துவின் சிறப்பான சீஷனாக மாறுவதற்கு படித்தல் மற்றொரு அத்தியாவசிய திறவுகோலாயிருக்கிறது. நாம் செயல்படும்போது, பாதையிலே அவர் நம்மை வழிநடத்துவார், வழிகாட்டுவார். லாபானிடமிருந்து எவ்வாறு பித்தளைத் தகடுகளை எடுப்பதென்பதை அறிந்துகொள்ள கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை நேபி தேடிக்கொண்டிருந்தான் என நான் நிச்சயம் அறிவேன், இருந்தும் அவனும் அவனுடைய சகோதரர்களும் வெற்றி பெறாமல் இருமுறை முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள், பாதையிலே கர்த்தர் அவர்களை வழிகாட்டிக்கொண்டிருந்தார். இறுதியாக, மூன்றாவது முறையாக, நேபி வெற்றி பெற்றான். “நான் என்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்பதை முன்னதாக அறியாதவனாய், நான் ஆவியினால் நடத்திச் செல்லப்பட்டேன்”5 என்பதை அவன் நினைவுகூர்ந்தான்.

என்ன செய்யப்பட வேண்டும் என்பதைப்பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதல் நமக்கு இல்லாதபோதும் நாம் முயற்சி செய்து செயல்படும்போது இப்படித்தான் கர்த்தர் செயல்படுகிறார். என்ன செய்யவேண்டுமென கர்த்தர் நேபிக்குக் கூறினார்: போய் தகடுகளை எடுத்து வாருங்கள். ஆனால் அதை எப்படிச் செய்யவேண்டுமென அவர் நேபிக்குக் கூறவில்லை. அதை கண்டுபிடிக்கவும் மற்றும் தேவனின் உதவியை நாடுவதற்கும் அவர் நேபியிடம் விட்டுவிட்டார், மேலும் நம் வாழ்வில் பெரும்பாலும் தேவன் இப்படித்தான் செயல்படுகிறார். விசுவாசத்தில் நாம் செயல்படும்போது, கர்த்தர் நம்மை வழிநடத்துகிறார், வழிகாட்டுகிறார்.

3.படியுங்கள்

சபையின் பெயர் சம்பந்தமாக ஜனங்களுக்கு மத்தியில் பிணக்குகளிருந்ததாக, 3 நேபியில் இரட்சகரிடத்தில் சீஷர்கள் குறிப்பிட்டார்கள். “வேதவார்த்தைகளை அவர்கள் வாசிக்கவில்லையா?”6 என அவர் கேட்டபோது, பிரதியுத்தரமாக இரட்சகர் ஒரு முக்கியமான கொள்கையை போதித்தார். பின்னர், இயேசு கிறிஸ்துவின் சிறப்பான சீஷனாக மாறுவதற்கு படித்தல் மற்றொரு அத்தியாவசிய திறவுகோலாயிருக்கிறது. ஜெபமும் வேதப்படிப்பும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்கிறது. நமது நன்மைக்காக அவைகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இது கர்த்தர் ஸ்தாபித்த நடைமுறை. “கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது உண்டு களியுங்கள், ஏனெனில் இதோ நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும் கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குத் தெரிவிக்கும்.”7

நாம் வேதங்களை படிக்கமட்டும் கூடாது, நேபியர்களுக்கு அவர் செய்து காட்டியதைப்போல, அவற்றிலிருந்து கற்றுக்கொடுக்கவும் வேண்டுமென இரட்சகர் போதித்தார்: “இப்பொழுதும் அவர்கள் எழுதின எல்லா வேத வாக்கியங்களையும் இயேசு ஏகமாய் விவரித்துச் சொன்னபோது, தாம் அவர்களுக்கு விவரித்துச் சொன்னவைகளை அவர்கள் போதிக்கவேண்டுமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.”8

திரும்பப்போய் பித்தளைத் தகடுகளை எடுத்து வருவது நேபிக்கு ஏன் மிக முக்கியமானதென்பதற்கான காரணங்களில் இது ஒன்று: வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு பயணம் செய்ய அவனுடைய குடும்பத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க உதவுவதற்கும் வேதங்கள் தேவைப்பட்டன. நாமும் நம் பயணத்திற்கு வேதங்களிலிருந்து வழிகாட்டுதலைத் தேட வேண்டும், நம் வீடுகளிலும் சபை அழைப்புகளிலும் அவற்றிலிருந்து நாம் கற்பிக்க வேண்டும்.

4. மாறுவதற்கு செயல்படுங்கள்

அநேக சமயங்களில் ஜெபத்திற்குப் பதில்கள் உடனடியாக வருவதில்லை. ஆனால் பித்தளைத் தகடுகளைப் பெற நேபி முயன்றுகொண்டிருந்தபோது, தொடர்ந்து செல்ல விசுவாசத்துடன், நீதியில் செயல்பட்டு, அவனைப் போல விடாமுயற்சியுடனும் நாமிருக்க வேண்டும். கர்த்தர் சிறிது சிறிதாக நமக்குக் காண்பிப்பார்; நாம் வேதங்களைப் படிக்கும்போது, கர்த்தர் நமக்கு பதில்களைக் கொடுப்பார் அல்லது ஒரு நாள், இன்னும் ஒரு வாரம், மேலும் ஒரு முறை முயற்சி செய்வதற்கான தேவையான வலிமையைக் கொடுப்பார். “அந்த பதில் வருகிறதற்கு முன்பு சிலசமயங்களில், நீண்டநேரம் நீங்கள் போராட தேவன் அனுமதிக்கிறார் என்பதற்கு நன்றியாயிருங்கள். அது உங்கள் விசுவாசத்தை அதிகரிக்கவும் உங்கள் நடத்தை வளரவும் செய்ய காரணமாயிருக்கிறது”9 என மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் சொன்னார்.

ஜெபம் மற்றும் வேதம் படிப்பதன் மூலம், இன்னும் ஒரு நாள், இன்னும் ஒரு வாரம் செயல்படவும், மேலும் ஒரு முறை முயற்சி செய்யவும் செயல்படவும் நிலைத்திருக்கவும், கர்த்தர் எப்போதுமே எனக்கு பெலத்தைக் கொடுத்திருக்கிறார். அநேக சமயங்களில் ஜெபத்திற்குப் பதில்கள் உடனடியாக வருவதில்லை. எனக்கு இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் உள்ளன, ஆனால் நான் தொடர்ந்து கேட்கிறேன், படிக்கிறேன், பதில்களுக்காக நான் காத்திருக்கும்போது செயல்பட கர்த்தர் எனக்கு தொடர்ந்து பெலன் அளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“விசுவாசத்தைப் பயன்படுத்தி, நிச்சயமற்ற அந்திக்குள் உங்கள் புரிதலின் எல்லைக்கு நீங்கள் நடந்து செல்லும்போது, மற்றபடி நீங்கள் பெறாத தீர்வுகளைக் காண நீங்கள் நடத்தப்படுவீர்கள்”10 எனவும் மூப்பர் ஸ்காட் சொன்னார்.

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் சிறந்த பின்பற்றுபவராக மாறுவது வாழ்நாள் பயணம், நாம் அனைவரும் வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு வேகத்தில் நகர்கிறோம். இது ஒரு போட்டி அல்ல, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும் உதவவுமே நாம் இங்கிருக்கிறோம் என்பதை நாம் மனதில் வைக்கவேண்டும். நமது வாழ்க்கையில் நம்முடன் பணியாற்ற இரட்சகரை அனுமதிக்கும்படியாக நாம் செயல்படவேண்டும்.

சிட்னி ரிக்டனுடன் பேசிக்கொண்டிருந்தபோது கர்த்தர் பின்வருபவற்றை சொன்னார்: “உன்னையும் உனது வேலைகளையும் நான் பார்த்தேன். உனது ஜெபங்களை நான் கேட்டேன், ஒரு மகத்தான பணிக்கு உன்னை ஆயத்தப்படுத்தினேன்.”11 நமது ஜெபங்களைக் கர்த்தர் கேட்கிறார், பதிலளிக்கிறாரென நான் சாட்சியளிக்கிறேன், அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மகத்தான பணியை அவர் வைத்திருக்கிறார். ஜெபம் மற்றும் வேதப் படிப்பு மற்றும் செயலின் மூலமாக, பரலோகத்தின் ஆசீர்வாதங்களை நம்மால் திறக்கமுடிந்து, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சிறந்த பின்பற்றுபவர்களா மாற முடியும்.

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார், “இறுதி நியாயத் தீர்ப்பு என்பது நல்ல மற்றும் தீய செயல்களின் மொத்த மதிப்பீடு அல்ல, நாம்செய்தவை. இது நமது செயல்கள் மற்றும் எண்ணங்களின் இறுதி விளைவை ஒப்புக்கொள்வதாகும் நாம் என்ன ஆனோம்.”12

தீர்க்கதரிசிகளுக்காக, ஞானதிருஷ்டிக்காரர்களுக்காக, வெளிப்படுத்துபவர்களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்; அவர்கள் கோபுரத்தின் காவல்காரர்கள். நாம் பார்க்காத காரியங்களை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களுடைய வார்த்தைகள் மூலம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சிறந்த பின்பற்றுபவர்களாக நாம் மாற முடிந்து, நமது திறனை நாம் அடைவோம் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறாரென்றும், நம் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக அறிந்திருக்கிறாரென்றும் நான் சாட்சியளிக்கிறேன். இது அவரது சபை. இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.