பொது மாநாடு
அவருக்குச் செவிகொடுங்கள்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


அவருக்குச் செவிகொடுங்கள்

நாம் நிச்சயமின்மையாலும் பயத்தாலும் சூழப்படும்போது, நமக்கு மிகவும் உதவி செய்வது அவரது குமாரனுக்குச் செவிகொடுப்பதாகும் என நமது பிதா அறிந்திருக்கிறார்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் இந்த ஞாயிறு காலை வேளையில் நாம் ஒன்றாக சந்தித்து ஆராதிக்க முடிவதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறது என அறிவதில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

கடந்த பல வாரங்களில், நமது தனிப்பட்ட வாழ்வில் நம்மில் அநேகர் தடங்கல்களை அனுபவித்திருக்கிறோம். பூகம்பங்கள், நெருப்பு, வெள்ளம், கொள்ளைநோய் மற்றும் பின்விளைவுகள் தினசரி நடைமுறைகளை தடங்கல் செய்து, உணவு, வியாபாரங்கள் மற்றும் சேமிப்புகளில் குறைபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

இவை அனைத்துக்கு மத்தியிலும், பொது மாநாட்டுக்காக எங்களுடன் இணைந்து, இந்தக் குழப்பத்தின் நேரத்தில் கர்த்தரின் வார்த்தையை கேட்க தேர்ந்துகொண்டதற்காக நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். துயரத்தை தொடர்ந்து வருகிற அதிகமான இருள், இயேசு கிறிஸ்துவின் ஒளியை இன்னமும் பிரகாசமானதாக்குகிறது. உலகம்தழுவிய குழப்பத்தின் இந்த நேரத்தில், நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய நன்மையைப்பற்றி சிந்தியுங்கள். இரட்சகர் மீது உங்கள் அன்பும் விசுவாசமும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதத்தை வேறொருவர் கண்டுபிடிக்க கிரியாவூக்கியாக இருக்க முடியும்.

கடந்த இரு ஆண்டுகளில், சகோதரி நெல்சனும் நானும் உலகம் முழுவதிலும் உங்களில் ஆயிரக்கணக்கானோரை சந்தித்திருக்கிறோம். வெளிப்புற பகுதிகளிலும் விடுதியறைகளிலும் நாங்கள் உங்களோடு பேசியிருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நான் இருந்ததாகவும், என் கண்கள் முன்னே இஸ்ரவேலின் கூடுகை நிகழ்ந்ததையும் நான் பார்த்தேன்.

“நமது முற்பிதாக்கள் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த,” அந்த நாளில் நாம் வசிக்கிறோம்”1 “பூமியின் பரப்பின்மீதும், சிதறடிக்கப்பட்டிருந்த கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனங்கள் மீதும், இறங்கக் கண்டேன், அவர்கள் நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்தவர்கள் மீது” “தேவ ஆட்டுக்குட்டியானவரின் வல்லமை இறங்கும்” என்ற தீர்க்கதரிசி நேபி தரிசனத்தில் மட்டும் பார்த்ததை நேரலையில் பார்க்க நம்மிடம் முன்வரிசை இருக்கைகள் இருக்கின்றன.2

நேபி பார்த்த அந்த ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுக்கும் மத்தியில் நீங்கள், என் சகோதர சகோதரிகள். அதைப்பற்றி சிந்தியுங்கள்!

நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் அல்லது உங்கள் சூழ்நிலைகள் என்ன என்பது பொருட்டின்றி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் இரட்சகர், தேவனின் தீர்க்கதரிசி, ஜோசப் ஸ்மித் உங்கள் தீர்க்கதரிசி. பரிசுத்தவான்களிடமிருந்து “எதுவுமே மறைக்கப்படாத”,3 இந்தக் கடைசி ஊழியக் காலத்தின் தீர்க்கதரிசியாக இருக்க பூமியின் அஸ்திபாரத்துக்கு முன்பே அவர் முன்நியமனம் செய்யப்பட்டார். மறுஸ்தாபிதத்தின் நடந்து கொண்டிருக்கிற முறையின்போது கர்த்தரிடமிருந்து வெளிப்படுத்தல் தொடர்ந்து வழிந்தோடிக்கொண்டேயிருக்கிறது.

பூமியில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறது என்றால் என்ன என நினைக்கிறீர்கள்?

நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றைக்குமாக ஒன்றாக முத்திரிக்கப்பட முடியும் என்பது அதன் அர்த்தம்! இயேசு கிறிஸ்துவிடமிருந்து அதிகாரம் பெற்ற ஒருவரால் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றதாலும், அவரது சபையின் அங்கத்தினராக திடப்படுத்தப்பட்டதாலும், நீங்கள் பரிசுத்த ஆவியின் இடைவிடாத தோழமையை அனுபவிக்க முடியும் என்பதும் அர்த்தமாகும். அவர் உங்களை வழிநடத்தி பாதுகாப்பார். நீங்கள் ஒருபோதும் ஆறுதலின்றி அல்லது உங்களுக்குதவ, தேவ வல்லமைக்கு எட்டாமல் விடப்படமாட்டீர்கள் என்பதாகும். நீங்கள் அத்தியாவசியமான நியமங்களைப்பெற்று, தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்வதால் ஆசாரியத்துவ வல்லமை உங்களை ஆசீர்வதிக்க முடியும் என்பதுவும் ஆகும். விசேஷமாக புயல் மூர்க்கமாய் இருக்கிற நேரத்தில் இந்த சத்தியங்கள் நமது ஆத்துமாக்களுக்கு எப்படிப்பட்ட நங்கூரம்.

மார்மன் புஸ்தகம் இரு பெரும் நாகரீகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப்பற்றி காலவகைப்படுத்துகிறது. பெரும்பான்மை ஜனங்களால் தேவனை மறக்கவும், கர்த்தரின் தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளை மறுதலிக்கவும், வல்லமையையும், புகழையும், மாம்ச சுகங்களையும் நாடவும் எவ்வளவு எளிதாயிருந்தது என அவர்களது வரலாறு காட்டுகிறது.4 திரும்பத் திரும்ப கடந்த கால தீர்க்கதரிசிகள், “பெரிதும் அற்புதமுமானவைகளை ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமுரைத்தனர், அவர்களோ விசுவாசிக்கவில்லை,”5 என அறிவித்திருக்கிறார்கள்.

நமது நாளிலும் இது வித்தியாசமாக இல்லை. எல்லா ஆண்டுகளிலும், பெரிதும் அற்புதமுமானவைகள் பூமி முழுவதிலும் அர்ப்பணிக்கப்பட்ட பீடங்களிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. ஆயினும், அவைகளை எங்கே தேடுவது என அவர்களுக்குத் தெரியாததால்6அல்லது முழு சத்தியத்தையும் பெற்றிராதவர்கள் சொல்வதைக் கேட்பதால் அல்லது உலகப்பிரகார முயற்சிகளுக்காக சத்தியத்தை அவர்கள் மறுத்ததால், அதிகமான ஜனங்கள் இந்த சத்தியங்களை தழுவிக்கொள்வது இல்லை.

சத்துரு புத்திசாலி. ஆயிரம் வருடங்களாக அவன் நல்லதை தீமையாகவும், தீமையை நல்லதாகவும் ஆக்கிக்கொண்டிருந்திருக்கிறான்.7 அவனது செய்திகள் சத்தமாகவும், தைரியமாகவும் பெருமைமிக்கதாகவும் இருப்பது போலிருக்கிறது.

எனினும் நமது பரலோக பிதாவிடமிருந்து வரும் செய்திகள் ஆணித்தரமாக வித்தியாசமானவை. அவர் எளிமையாகவும் அமைதியாகவும் தொடர்புகொள்கிறார், அப்படிப்பட்ட அதிக தெளிவுடனிருப்பதை நாம் தவறாக புரிந்துகொள்ள முடியாது.8

உதாரணமாக, பூமியிலுள்ள அழிவுக்கேதுவானவர்களுக்கு, தன் ஒரே பேறான குமாரனை அவர் அறிமுகம் செய்தபோதெல்லாம் அவர் அதை குறிப்பிடத்தக்க மிக்க குறைந்த வார்த்தைகளில் அதைச் செய்திருக்கிறார். மறுரூப மலையில், பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுக்கும் தேவன் சொன்னார், “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்.”9 முற்கால உதாரத்துவ ஸ்தலத்தில் நேபியர்களுக்கு அவரது வார்த்தைகள் “இதோ என் நேச குமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன், இவரில் என் நாமத்தை நான் மகிமைப்படுத்தினேன், அவருக்குச் செவிகொடுங்கள்.” 10 ஜோசப் ஸ்மித்துக்கு இந்த ஊழியக்காலத்தைத் தொடங்கிய ஆழ்ந்த அறிவிப்பில், தேவன் எளிமையாக சொன்னார், “.இவர் என் நேச குமாரன். அவருக்குச் செவிகொடு!”11

இப்போது, என்அன்பு சகோதர சகோதரிகளே, இப்போது குறிப்பிடப்பட்ட இந்த மூன்று தருணங்களிலும் பிதா குமாரனை அறிமுகம் செய்வதற்கு முன்பே, அங்கிருந்த ஜனங்கள் பயந்த நிலையில் இருந்தார்கள், ஒரு அளவுக்கு விரக்தியுடனிருந்தார்கள் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

மறுரூப மலையில் இயேசு கிறிஸ்து மேகத்தால் சூழப்பட்டதை அவர்கள் பார்த்தபோது, அப்போஸ்தலர்கள் பயந்தார்கள்.

நேபியர்கள் பயந்தார்கள், ஏனெனில் பல நாட்களாக அவர்கள் அழிவிலும் இருளிலும் இருந்திருக்கிறார்கள்.

பரலோகங்கள் திறப்பதற்கு சற்று முன்பு, ஜோசப் ஸ்மித் இருளின் பிடியிலிருந்தார்.

நாம் நிச்சயமின்மை மற்றும் பயத்தால் சூழப்பட்டிருக்கும்போது, நமக்கு மிகவும் உதவக்கூடியது அவரது குமாரனுக்குச் செவிகொடுப்பது என பிதா அறிகிறார்.

ஏனெனில் நாம் அவரது குமாரனுக்குசெவிகொடுப்பதை நாடும்போது, உண்மையாகவே செவிகொடுக்க நாடும்போது, எந்த சூழலிலும் என்ன செய்வதென அறிய நாம் வழிநடத்தப்படுவோம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் முதல் வார்த்தை செவிகொடுங்கள். 12அதாவது “கீழ்ப்படியும் நோக்கத்துடன் கேட்பதாகும்.”13 செவிகொடுத்தல் என்பது “அவருக்கு செவிகொடுப்பதாகும்” இரட்சகர் சொல்வதைக் கேட்டல் பின்பு அவரது ஆலோசனையைக் கேட்பதாகும். அந்த இரு வார்த்தைகளில், ”அவருக்குச் செவிகொடுங்கள்”, தேவன் நமக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் இந்த வாழ்க்கையில் சந்தோஷத்துக்கு மாதிரியைக் கொடுக்கிறார். நாம் கர்த்தரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க இங்கிருக்கிறோம், அவர்களுக்குச் செவிகொடுப்பது அவர் நமக்குச் சொன்னவற்றைக் கேட்பதாகும்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் நாடும்போது, அவருக்குச் செவி கொடுக்க நமது முயற்சிகள் எப்போதையும் விட மனமுவந்ததாக இருக்க வேண்டும். அவரது வார்த்தைகளுடனும், அவரது போதனைகளுடனும், அவரது சத்தியங்களுடனும் நமது அன்றாட வாழ்க்கையை நிரப்ப, விழிப்புடன் தொடர்ச்சியான முயற்சி தேவைப்படுகிறது.

சமூக ஊடகத்தில் நாம் எதிர்கொள்ளும் தகவலை மட்டும் நாம் சார்ந்திருக்க முடியாது. இயங்கலையில் பில்லியன் வார்த்தைகளோடு, சத்துருவின் உரத்த, துஷ்டத்தனமான முயற்சிகளில் தொடர்ந்து ஊடுருவியுள்ள வணிகமயம் நிறைந்த உலகில் அவருக்குச் செவிகொடுக்க நாம் எங்கு செல்ல முடியும்?

நாம் வேதங்களிடத்தில் செல்லமுடியும். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷம், அவரது பாவநிவர்த்தியின் ஆற்றல், நமது பிதாவின் மகிழ்ச்சி மற்றும் மீட்பின் மாபெரும் திட்டத்தைப்பற்றி அவை நமக்கு போதிக்கின்றன. விசேஷமாக அதிகரிக்கும் குழப்பங்களின் இந்த நாட்களில் ஆவிக்குரிய பிழைத்திருத்தலில் தேவனின் வார்த்தையில் தினமும் மூழ்குதல் முக்கியமாகும். நாம் தினமும் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிக்கும்போது, நாம் எதிர்கொள்வோம் என ஒருபோதும் நாம் நினைக்காத கஷ்டங்களுக்கு எப்படி பதிலளிப்பது என கிறிஸ்துவின் வார்த்தைகள் பதிலளிக்கும்.

ஆலயத்திலும் நாம் அவருக்குச் செவிகொடுக்க முடியும். கர்த்தரின் வீடு கற்றுக்கொள்ளுதலின் வீடாக இருக்கிறது. அங்கு கர்த்தர் தன் சொந்த விதமாக போதிக்கிறார். அங்கு ஒவ்வொரு நியமும் இரட்சகரைப்பற்றி போதிக்கிறது. அங்கு திரையை எப்படி பிரிப்பது, பரலோகத்தோடு எப்படி தெளிவாகத் தொடர்புகொள்வது என நாம் கற்றுக்கொள்கிறோம். நம்மையும் நாம் நேசிப்பவர்களையும் பெலப்படுத்த, சத்துருவை எப்படி கடிந்துகொள்வது, கர்த்தரின் ஆசாரியத்துவ வல்லமையை எப்படி பெறுவது என அங்கு நாம் கற்றுக்கொள்கிறோம். அங்கு அடைக்கலம் தேட நாம் ஒவ்வொருவரும் எப்படி ஆர்வமாக இருக்க வேண்டும்.

இந்த தற்காலிக கோவிட்- 19 கட்டுப்பாடுகள் விலக்கப்படும்போது, ஆலயத்தில் ஆராதிக்கவும் சேவைசெய்யவும் ஒழுங்கான நேரத்தை தயவுசெய்து திட்டமிடுங்கள். அந்த நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் வேறெதுவாலும் முடியாத விதங்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கும். நீங்கள் அங்கிருக்கும்போது கேட்கிற, உணர்கிறவற்றை சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும் நீங்கள் நேசிக்கிறவர்கள் மற்றும் சேவை செய்பவர்களையும் ஆசீர்வதிக்க பரலோகங்களை எப்படி திறப்பது என போதிக்குமாறு கரத்தரிடம் கேளுங்கள்.

ஆலயத்தில் ஆராதிப்பது இப்போது சாத்தியமில்லை என்பதால், குடும்ப வரலாற்று ஆய்வு, மற்றும் வகைப்படுத்துதல் உள்ளிட்ட குடும்ப வரலாற்றில் உங்கள் பங்கேற்பை அதிகரிக்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். ஆலயத்திலும் குடும்ப வரலாற்றுப் பணியிலும் உங்கள் நேரத்தை நீங்கள் அதிகரிக்கும்போது, அவருக்குச் செவிகொடுக்க உங்கள் திறமையை அதிகரித்து மேம்படுத்துவீர்கள் என நான் வாக்களிக்கிறேன்.

பரிசுத்த ஆவியின் கிசுகிசுப்புக்களை அடையாளம் காண நமது திறமைகளை நாம் சுத்திகரிக்கும்போது, நாம் அதிக தெளிவாக அவருக்குச் செவி கொடுக்கிறோம். பரிசுத்த ஆவி உங்களுடன் எப்படி பேசுகிறது என்பதை அறிவது இப்போதை விட கண்டிப்பாக ஒருபோதும் இருந்ததில்லை. தேவத்துவத்தில், பரிசுத்த ஆவியானவர் தூதுவர். பிதாவும் குமாரனும் நீங்கள் பெற விரும்புவதை அவர் உங்கள் மனதுக்கு எண்ணமாக கொண்டுவருவார். அவரே தேற்றரவாளன். அவர் உங்கள் இருதயத்துக்கு சமாதானத்தின் உணர்வை கொண்டுவருவார். கர்த்தரின் வார்த்தையை கேட்டு, வாசிக்கும்போது அவர் சத்தியத்தைப்பற்றி சாட்சியளித்து, எது சத்தியம் என உறுதி செய்வார்.

தனிப்பட்ட வெளிப்படுத்தல் பெற, உங்கள் ஆவிக்குரிய திறனை அதிகரிக்க எடுக்கும் எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டும் என்ற எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கிறேன்.

அப்படிச் செய்வது, உங்கள் வாழ்க்கையில் எப்படி முன்னே செல்வது, பிரச்சினையான நேரங்களில் என்ன செய்வது, சத்துருவின் சோதனைகளையும் ஏமாற்றுக்களையும் பகுத்தறிந்து எப்படி தவிர்ப்பதென அறிய உங்களுக்கு உதவும்.

கடைசியாக தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களின் வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது, நாம் அவருக்கு செவிகொடுக்கிறோம். நியமிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் அவரைக் குறித்து எப்போதும் சாட்சியளிக்கிறார்கள். நமது அநித்திய அனுபவங்களின் இருதயத்தை பிழியும் புதிர்களூடே நாம் நமது பாதையைக் கண்டுபிடிக்கும்போது, அவை வழியைக் காட்டுகின்றன.

இரட்சகர் என்ன சொல்லியிருக்கிறார் மற்றும் அவரது தீர்க்கதரிசிகள் மூலம் இப்போது என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் மிகவும் தன்னிச்சையாக கேட்டு, செவிகொடுக்கும்போது, என்ன நடக்கும்? சோதனை, போராட்டங்கள் மற்றும் பெலவீனங்களை சமாளிக்க கூடுதல் வல்லமையுடன் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என நான் வாக்களிக்கிறேன். உங்கள் திருமணம், குடும்ப உறவுகள், மற்றும் அன்றாட வாழ்வில் அறபுதங்களை நான் வாக்களிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் கொந்தளிப்பு அதிகரித்தாலும் சந்தோஷத்தை உணரும் உங்கள் திறன் அதிகரிக்கும்.

இந்த ஏப்ரல் 2020 பொது மாநாடு, உலகத்தையே மாற்றிய ஒரு நிகழ்ச்சியின் நினைவுகூரும் நமது நேரமாகும். ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனத்தின் 200வது நிறைவை நாம் எதிர்பார்த்தபோது, இந்த விசேஷித்த நிகழ்ச்சியை பொருத்தமானபடி நினைவுகூர நாம் என்ன செய்யலாம் என பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் வியந்தோம்.

அந்த தேவன் காட்சி தந்த நிகழ்வு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதத்தை தொடங்கி காலங்களின் நிறைவின் ஊழியக்காலத்தை கொண்டு வந்தது.

ஒரு நினைவிடம் எழுப்பப்படவேண்டுமோ என நினைத்தோம். ஆனால் முதல் தரிசனத்தின் தனித்துவமான வரலாற்று சிறப்பையும் அனைத்துலக தாக்கத்தையும் நாங்கள் கருத்தில்கொள்ளும்போது, கிரானைட் அல்லது கற்களால் அல்ல, ஆனால் வார்த்தைகளில், பயபக்தியான பரிசுத்தமான பிரகடன வார்த்தைகள், கற்பலகைகளில் செதுக்கப்படவல்ல ஆனால் நமது இருதயங்களின் “மாம்ச பலகைகளில்” எழுதப்படஒரு நினைவிடத்தை உருவாக்க உணர்த்தப்பட்டோம். 14

சபை அமைக்கப்பட்டதிலிருந்து ஐந்து பிரகடனங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, கடைசியானது 1995ல் தலைவர் கார்டன் பி. ஹிங்க்லியால் வழங்கப்பட்ட “குடும்பம் உலகத்துக்கு ஒரு பிரகடனம்.”

இப்போது உலக வரலாற்றில் இந்த குறிப்பிடத்தக்க நேரத்தையும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக சிதறுண்ட இஸ்ரவேலை கூட்டிச் சேர்க்க கர்த்தர் கொடுத்த பொறுப்பினிமித்தமும் சிந்தித்தபோது, நாங்கள் பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் பின்வரும் பிரகடனத்தை வழங்குகிறோம். இதன் தலைப்பு “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதம்: உலகத்துக்கு ஒரு இருநூற்றாண்டு பிரகடனம்.” இது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பிரதான தலைமையாலும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தாலும் எழுதப்பட்டது. இதன் தேதி ஏப்ரல் 2020. இன்றைக்காக ஆயத்தம் செய்ய, பிதாவையும் குமாரனையும் ஜோசப் ஸ்மித் முதலில் பார்த்த பரிசுத்த தோப்பில் முன்னதாக இந்த பிரகடனத்தை நான் பதிவு செய்தேன்.

“உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலுமுள்ள தமது பிள்ளைகளை தேவன் நேசிக்கிறார் என நாங்கள் பயபக்தியோடு பிரகடனம் செய்கிறோம். பிதாவாகிய தேவன் நமக்கு தெய்வீக பிறப்பையும், ஒப்பில்லாத ஜீவியத்தையும், தன் நேச குமாரனின் முடிவில்லா பாவ நிவாரண பலியையும் கொடுத்திருக்கிறார். பிதாவின் வல்லமையால் இயேசு கிறிஸ்து மறுபடியும் எழுந்து மரணத்தின் மீது ஜெயம் கொண்டார். அவரே நமது இரட்சகர், நம் உதாரண புருஷர், நமது மீட்பர்.

“இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1820ல் ஒரு வசந்த கால காலையில், இளம் ஜோசப் ஸ்மித் எந்த சபையில் சேர்வது என அறிய, அ.ஐ.நாட்டின் நியூயார்க்கின் புறநகரில் தன் வீட்டருகிலுள்ள காட்டுக்கு ஜெபிக்கச் சென்றார். தன் ஆத்துமாவின் இரட்சிப்பைப்பற்றிய கேள்விகள் அவரிடமிருந்தன மற்றும் தேவன் தம்மை வழிநடத்துவார் என நம்பினார்.

அவரது ஜெபத்துக்கு பதிலாக, பிதாவாகிய “தேவனும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் ஜோசப்புக்கு தரிசனம் தந்து, வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, ‘எல்லாம் நிறைவேறுவதை’ (அப்போஸ்தலர் நடபடிகள் 3:21) தொடங்கி வைத்தனர். இந்த தரிசனத்தில் முதல் அப்போஸ்தலர்களின் மரணத்தைத் தொடர்ந்து, கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு சபை பூமியிலிருந்து இழக்கப்பட்டது என அறிந்தார். அது திரும்ப வருவதற்கு ஜோசப் கருவியாக இருப்பார்.

“பிதா மற்றும் குமாரனின் வழிநடத்துதலின் கீழ் பரலோக தூதுவர்கள் ஜோசப்புக்கு அறிவுரையளிக்கவும் இயேசு கிறிஸ்துவின் சபையை மறுஸ்தாபிதம் செய்யவும் வந்தார்கள் என நாங்கள் உறுதியளிக்கிறோம். பாவங்களின் மன்னிப்புக்காக மூழ்கச்செய்து ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரத்தை உயிர்த்தெழுந்த யோவான் ஸ்நானன் மறுஸ்தாபிதம் செய்தான். முதல் பன்னிரு அப்போஸ்தலர்களில் மூவரான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான், அப்போஸ்தலத்துவத்தையும், ஆசாரியத்துவ அதிகாரத்தின் திறவுகோல்களையும் மறுஸ்தாபிதம் செய்தனர். மரணத்தைக் கடந்த நித்திய உறவுகளில் குடும்பங்களை என்றென்றைக்குமாக ஒன்றாக இணைக்கும் அதிகாரத்தை மறுஸ்தாபிதம் செய்த எலியா உள்ளிட்ட பிறரும் வந்தனர்.

“இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடான, மார்மன் புஸ்தகம் என்னும் பூர்வகால பதிவேட்டை மொழிபெயர்க்க ஜோசப் ஸ்மித் வரமும் வல்லமையும் கொடுக்கப்பட்டார் எனவும் மேலும் நாங்கள் சாட்சியளிக்கிறோம். அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு உடனேயே மேற்கு கோளத்திலுள்ள ஜனங்களிடையே இயேசு கிறிஸ்துவின் தனிப்பட்ட ஊழியத்தைப்பற்றிய விவரத்தையும் எழுத்துக்களின் பக்கங்கள் உள்ளடக்கியுள்ளன. இது வாழ்க்கையின் நோக்கத்தைப் போதித்து, அந்த நோக்கத்துக்கு மையமாக இருக்கிற கிறிஸ்துவின் கோட்பாட்டை விளக்குகிறது. வேதாகமத்துக்கு இணை வேதமாக, மார்மன் புஸ்தகம் மனுஷர் அனைவரும் அன்பான பரலோக பிதாவின் குமாரர்களும் குமாரத்திகளும் என சாட்சியளித்து, நமது ஜீவியத்துக்காக அவரிடம் தெய்வீக திட்டம் இருக்கிறது எனவும் பழங்காலத்தைப் போலவே அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து இன்றும் பேசுகிறார் எனவும் சாட்சியளிக்கிறது.

“ஏப்ரல் 6, 1830 நிறுவப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு சபை என நாங்கள் பிரகடனம் செய்கிறோம். இதன் பிரதான மூலைக்கல்லான இயேசு கிறிஸ்துவின் பரிபூரண ஜீவியத்திலும், அவரது முடிவற்ற பாவநிவர்த்தியிலும் உண்மையான உயிர்த்தெழுதலிலும் சபை நங்கூரமிட்டுள்ளது. இயேசு கிறிஸ்து மீண்டும் அப்போஸ்தலர்களை அழைத்து, அவர்களுக்கு ஆசாரியத்துவ அதிகாரம் கொடுத்திருக்கிறார். அவரிடமும், அவரது சபைக்கும் வந்து பரிசுத்த ஆவியையும், இரட்சிப்பின் நியமங்களையும் பெறவும், நிலையான சநதோஷம் பெறவும் நம் அனைவரையும் அவர் அழைக்கிறார்.

பிதாவாகிய தேவனாலும், அவரது நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாலும் தொடங்கப்பட்ட மறுஸ்தாபிதத்திலிருந்து இரு நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த தீர்க்கதரினமுரைக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த அறிவை உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கானோர் தழுவியுள்ளனர்.

தொடர் வெளிப்படுத்தல் மூலம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மறுஸ்தாபிதம் முன் செல்கிறது என நாங்கள் மகிழ்ச்சியுடன் பிரகடனம் செய்கிறோம். தேவன் ‘சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டிச் சேர்க்கும்போது,’ (எபேசியர் 1:10) பூமி ஒருபோதும் இப்போதுபோல இருக்காது.

“பயபக்தியோடும் நன்றியுணர்வோடும், அவரது அப்போஸ்தலர்களாக நாங்கள் பரலோகங்கள் திறந்திருக்கின்றன என எங்களைப்போல அறியும்படியாக அனைவரையும் அழைக்கிறோம். அவரது நேச குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்குமான தம் சித்தத்தை தேவன் அறியப் பண்ணுகிறார் என நாங்கள் உறுதியளிக்கிறோம். மறுஸ்தாபிதத்தின் செய்தியை ஜெபத்துடன் படித்து விசுவாசத்தில் செயல்படுபவர்கள், நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வாக்களிக்கப்பட்ட இரண்டாம் வருகைக்கு, உலகத்தை ஆயத்தப்படுத்த, அதன் தெய்வீகத்தன்மை மற்றும் அதன் நோக்கத்தில் தங்களுடைய சொந்த சாட்சியைப் பெற, ஆசீர்வதிக்கப்படுவார்கள்”15 என நாங்கள் சாட்சியளிக்கிறோம்.

அன்பு சகோதர சகோதரிகளே, அதன் முழுமையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் குறித்து உலகத்துக்கு இது எங்கள் இருநூற்றாண்டு பிரகடனம். இது 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற மொழிகள் விரைவில் தொடரும். இது சபை இணையதளத்தில் உடனே கிடைக்கும், அதிலிருந்து நீங்கள் பிரதியைப் பெறலாம். அதைத் தனியாகவும் உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் படியுங்கள். சத்தியங்களை சிந்திக்கவும், நீங்கள் அவற்றுக்குச் செவிகொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் அந்த சத்தியங்களின் தாக்கம்பற்றி சிந்தியுங்கள், அவற்றோடு வருகிற கட்டளைகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் செவிகொடுங்கள்.

இந்தக் கடைசி ஊழியக்காலத்தை திறக்க கர்த்தர் தெரிந்துகொண்ட முன்நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் என நான் அறிவேன். அவர் மூலமே கர்த்தரின் சபை பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. ஜோசப் தன் சாட்சியை, தன் இரத்தத்தினாலே முத்திரித்தார். நான் அவரை எவ்வாறு நேசிக்கிறேன், கனம்பண்ணுகிறேன்!

தேவன் ஜீவிக்கிறார். இயேசுவே கிறிஸ்து! அவரது சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறது! அவரும் அவரது பிதாவாகிய நமது பரலோக பிதாவும் நம்மைக் கண்காணிக்கின்றனர். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.