பொது மாநாடு
அற்புதங்கள், தூதர்கள் மற்றும் ஆசாரியத்துவ வல்லமை
ஏப்ரல் 2024 பொது மாநாடு


அற்புதங்கள், தூதர்கள் மற்றும் ஆசாரியத்துவ வல்லமை

அற்புதங்கள் மற்றும் தூதர்களின் ஊழியம் உட்பட ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்களை நீங்கள் விரும்பினால், தேவன் கிடைக்கச் செய்த உடன்படிக்கைகளின் பாதையில் நடவுங்கள்.

இன்று பலர் அற்புதங்கள் இல்லை என்றும், தூதர்கள் கற்பனையானவர்கள் என்றும், பரலோகங்கள் மூடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். அற்புதங்கள் நின்றுவிடவில்லை, தூதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள், பரலோகம் உண்மையிலேயே திறந்திருக்கிறது என்று நான் சாட்சி கூறுகிறேன்.

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, அவருடைய பிரதான அப்போஸ்தலன் பேதுருவிடம் ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களைக் கொடுத்தார்.1 இந்த திறவுகோல்கள் மூலம், பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் இரட்சகரின் சபையை வழிநடத்தினர். ஆனால் அந்த அப்போஸ்தலர்கள் இறந்தபோது, ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டன.

ஆசாரியத்துவத்தின் பண்டைய திறவுகோல்கள் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன என்று நான் சாட்சி கூறுகிறேன். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மற்றும் பிற பண்டைய தீர்க்கதரிசிகள் உயிர்த்தெழுந்த மனிதர்களாக தோன்றினர், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் மேல் கர்த்தர் “என் ராஜ்யத்தின் திறவுகோல்கள் மற்றும் சுவிசேஷத்தின் ஊழியக்காலம்” என்று விவரித்ததை அருளினார்கள்.2

அதே திறவுகோல்கள் இன்று வரை தீர்க்கதரிசியிலிருந்து தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள் என நாம் ஆதரிக்கும் 15 மனிதர்கள், இரட்சகரின் சபையை வழிநடத்த அவைகளைப் பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களைப் போலவே, அனைத்து ஆசாரியத்துவத் திறவுகோல்களையும் தரித்திருந்து மற்றும் செயல்படுத்துவதற்கு அதிகாரம் பெற்ற மூத்த அப்போஸ்தலர் ஒருவர் இருக்கிறார். அவர் தலைவர் ரசல் எம். நெல்சன், தீர்க்கதரிசி மற்றும் நமது நாளில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் சபையின் தலைவர்: பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை.

இரட்சகரின் சபையின் மூலம், நாம் ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்—நம் வாழ்வில் நமக்கு உதவும் தேவ வல்லமை உட்பட. அங்கீகரிக்கப்பட்ட ஆசாரியத்துவத் திறவுகோல்களின் கீழ், நாம் தேவனுக்குப் பரிசுத்தமான வாக்குறுதிகளை வழங்குகிறோம் மற்றும் அவருடைய பிரசன்னத்தில் வாழ நம்மைத் தயார்படுத்தும் பரிசுத்த நியமங்களைப் பெறுகிறோம். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுடன் தொடங்கி, பின்னர் ஆலயத்தில், நாம் அவரிடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் உடன்படிக்கைகளின் பாதையில் முன்னேறுகிறோம்.

நமது தலையில் கைகளை வைத்து, வழிகாட்டுதல், ஆறுதல், ஆலோசனை, குணப்படுத்துதல் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் வல்லமை உள்ளிட்ட ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம். என் வாழ்நாள் முழுவதும் இந்த மாபெரும் வல்லமையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அதை பரிசுத்த மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் வல்லமை என்று குறிப்பிடுகிறோம்.3

என்னுடைய இளமைப் பருவத்தில், இந்த வல்லமையின் மீது நான் மிகுந்த மரியாதையைப் பெற்றேன், குறிப்பாக இது ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களில் வெளிப்படுத்தப்பட்டது. சிலியில் இளம் ஊழியக்காரனாகச் சேவை செய்தபோது, நானும் என் தோழனும் கைது செய்யப்பட்டு பிரிக்கப்பட்டோம். ஏன் என்று நம்மிடம் கூறப்படவில்லை. அது பெரும் அரசியல் எழுச்சியின் காலம். ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவ காவல் துறையால் கைது செய்யப்பட்டனர், அவர்கள்பற்றி மீண்டும் ஒருபோதும் கேட்கப்படவில்லை.

விசாரணைக்குப் பிறகு, நான் என் அன்புக்குரியவர்களை இனி எப்போதாவது பார்ப்பேனா என்று தெரியாமல் சிறை அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். நான் என் பரலோக பிதாவிடம் திரும்பினேன், உருக்கமாக கெஞ்சினேன்: “பிதாவே, உமது ஊழியக்காரர்களை நீர் கவனித்துக்கொள்கிறீர் என்று எனக்கு எப்போதும் கற்பிக்கப்படுகிறது. தயவு செய்து பிதாவே, நான் ஒன்றும் விசேஷமானவன் அல்ல, ஆனால் நான் கீழ்ப்படிந்திருக்கிறேன், இன்றிரவு எனக்கு உமது உதவி தேவை.”

இந்த உதவியின் விதைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டன. என் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, நான் சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்பட்டேன் மற்றும் பரிசுத்த ஆவியின் வரம் வழங்கப்பட்டது. நான் தனியாக ஜெபிக்கும்போது, கம்பிகளுக்குப் பின்னால், பரிசுத்த ஆவியானவர் உடனடியாக என்னிடம் வந்து என்னை ஆறுதல்படுத்தினார். ஆசாரியத்துவத்தின் மற்றொரு ஆசீர்வாதமான எனது கோத்திரபிதா ஆசீர்வாதத்திலிருந்து ஒரு விசேஷித்த பகுதியை அவர் என் மனதில் கொண்டு வந்தார். அதில், என் விசுவாசத்தின் மூலம், அழகும் நல்லொழுக்கமும் அன்பும் நிறைந்த ஒரு பெண்ணுடன் நான் இக்காலத்துக்கும் நித்தியத்துக்கும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட முடியும் என்று தேவன் எனக்கு உறுதியளித்தார். நாங்கள் விலைமதிப்பற்ற மகன்கள் மற்றும் மகள்களின் பெற்றோராக மாறுவோம், மேலும் நான் இஸ்ரவேலில் தகப்பனாக ஆசீர்வதிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுவேன்.

என் எதிர்காலத்தைப் பற்றிய அந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகள் என் ஆத்துமாவை சமாதானத்தால் நிரப்பின. அவைகள் என் அன்பான பரலோக பிதாவிடமிருந்து வந்தவைகள் என்று எனக்குத் தெரியும், அவர் எப்போதும் அவருடைய வாக்குறுதிகளைக் காத்துக்கொள்கிறார்.4 அந்தத் தருணத்தில், நான் விடுதலையாகி, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதைக் காண வாழ்வேன் என்ற உறுதி எனக்கு இருந்தது.

சுமார் ஒரு வருடம் கழித்து, பரலோக பிதா என்னை அழகும் நல்லொழுக்கமும் அன்பும் நிறைந்த ஒரு மனைவியால் ஆசீர்வதித்தார். லினெட்டும் நானும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டோம். நாங்கள் மூன்று அருமையான மகன்கள் மற்றும் நான்கு அருமையான மகள்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம். 17 வயது சிறுவனாக நான் பெற்ற கோத்திரபிதா ஆசீர்வாதத்தில் தேவனின் வாக்குறுதியின்படி நான் ஒரு தந்தையானேன்.

ஆதலால், எனக்குப் பிரியமான சகோதரரே [சகோதரிகளே], கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறினதினிமித்தம் அற்புதங்கள் ஓய்ந்துபோனதா?…

“அப்படியல்ல, மனுபுத்திரருக்குள்ளே தூதர்களும் பணிவிடை செய்வதிலிருந்து ஓய்ந்து போகவில்லை.”5

ஆசாரியத்துவ வல்லமையின் நேரடி விளைவாக, அற்புதங்களும், ஊழியங்களும் நம் வாழ்வில் தொடர்ந்து நிகழ்கின்றன என்று நான் சாட்சி கூறுகிறேன். சில ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன, நாம் பார்க்கக்கூடிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகளில். மற்றவை படிப்படியாக விரிவடைகின்றன, இந்த வாழ்க்கையில் முழுமையாக நிறைவேற்றப்படாது. ஆனால் தேவன் தம்முடைய வாக்குறுதிகள் அனைத்தையும் எப்பொழுதும் காத்துக்கொள்கிறார், நமது குடும்ப வரலாற்றிலிருந்து இந்த விவரத்தில் விளக்கப்பட்டுள்ளது:

எனது தந்தைவழி தாத்தா கிராண்ட் ரீஸ் போவன் மிகுந்த விசுவாசம் கொண்டவர். அவர் எவ்வாறு தனது சொந்த கோத்திரபிதா ஆசீர்வாதத்தைப் பெற்றார் என்பதை அவர் விவரித்ததை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அவரது குறிப்பிதழில், அவர் பதிவு செய்தார்: “குணப்படுத்தும் வரத்தை கோத்திரபிதா எனக்கு உறுதியளித்தார். அவர் சொன்னார், ‘நோயாளிகள் குணமடைவார்கள். ஆம், மரித்தவர்கள் உன் கைகளின் கீழ் எழுப்பப்படுவார்கள்.’”

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தாத்தா வைக்கோல் குவித்துக்கொண்டிருந்தபோது வீட்டிற்குத் திரும்பவரத் தூண்டப்பட்டார். அவரை நோக்கி வந்த அவரது தந்தை அவரை சந்தித்தார். “கிராண்ட், உன் தாய் இப்போதுதான் இறந்துவிட்டாள்,” என்று அவரது தந்தை கூறினார்.

நான் தாத்தாவின் குறிப்பிதழிலிருந்து மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்: “நான் நிறுத்தவில்லை, ஆனால் வீட்டிற்குள் விரைந்து சென்றேன், முன் வராந்தாவில் அவர் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். நான் அவரைப் பார்த்தேன், அவரிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நான் என் கோத்திரபிதா ஆசீர்வாதத்தையும், நான் விசுவாசமுள்ளவனாக இருந்தால், என் விசுவாசத்தினாலே நோயுற்றவர்கள் குணமடைவார்கள் என்ற வாக்குறுதியையும் நினைவு கூர்ந்தேன்; மேலும் மரித்தவர்கள் எழுப்பப்படுவார்கள். நான் அவர் தலையில் என் கைகளை வைத்து, நான் கர்த்தரிடம் சொன்னேன், அவர் எனக்கு கோத்திரபிதா மூலம் அளித்த வாக்குறுதி உண்மையானால், இந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தி என் தாயை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அவர் இதைச் செய்வார் என்றால், அவருடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் ஒருபோதும் தயங்க மாட்டேன் என்று நான் அவருக்கு வாக்களித்தேன். நான் ஜெபித்தபோது, அவர் கண்களைத் திறந்து சொன்னார், ‘கிராண்ட், என்னை எழுப்பி விடு. நான் ஆவியாக இருந்தேன், ஆனால் நீ என்னை திரும்ப அழைத்தாய். இது உனக்கும் என் மீதியான குடும்பத்தினருக்கும் எப்பொழுதும் சாட்சியாக இருக்கட்டும்.’’’ என்றார்.

தலைவர் ரசல் எம். நெல்சன் அற்புதங்களைத் தேடவும் எதிர்பார்க்கவும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.6 ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதால், தேவனுடைய வல்லமையும் அதிகாரமும் பூமியில் உள்ளன என்று நான் சாட்சி கூறுகிறேன். அழைப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம், ஆண்களும் பெண்களும், இளைஞர்களும் முதியவர்களும் ஆசாரியத்துவப் பணியில் பங்கேற்கலாம். இது தூதர்கள் கலந்து கொள்ளும் அற்புதங்களின் பணி. இது பரலோகத்தின் பணி, அது தேவனின் குழந்தைகள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது.

1989-ல், ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பம் ஒரு தொகுதி சுற்றுலாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். தாமதமாகிவிட்டது. லினெட் எங்கள் ஆறாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கட்ட மறந்திருந்த சீட் பெல்ட்டைக் கட்டுமாறு ஒரு வலுவான தூண்டுதலை உணர்ந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு நாங்கள் சாலையில் ஒரு வளைவைச் சுற்றி வந்தோம்; ஒரு கார் எங்கள் பாதையில் கோட்டைக் கடந்தது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 70 மைல்கள் (112 கிமீ) வேகத்தில் சென்ற நான், எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க வளைத்தேன். எங்கள் வேன் உருண்டு, நெடுஞ்சாலையில் சறுக்கி, சாலையை விட்டு நழுவி, இறுதியாக நின்று, பயணிகளின் பக்கம் மண்ணில் இறங்கியது.

அடுத்ததாக நான் கேட்டது லினெட்டின் குரல்: “ஷேன், நாம் உங்கள் கதவு வழியாக வெளியேற வேண்டும்.” நான் என் சீட் பெல்ட்டில் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தேன். புரிந்துகொள்ள சில வினாடிகள் ஆனது. இப்போது வேனின் கூரையாக இருந்த எனது ஜன்னல் வழியாக ஒவ்வொரு குழந்தைகளையும் வேனில் இருந்து தூக்க ஆரம்பித்தோம். என்ன நடந்தது என்று நினைத்து அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.

எங்கள் 10 வயது மகள் எமிலியை காணவில்லை என்பதை விரைவில் உணர்ந்தோம். நாங்கள் அவளுடைய பெயரைச் சொல்லி கத்தினோம், ஆனால் எந்த பதிலும் இல்லை. வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தொகுதி உறுப்பினர்களும், சம்பவ இடத்துக்கு வந்து அவளை விரைவாகத் தேடினர். அது மிகவும் இருட்டாக இருந்தது. நான் மீண்டும் ஒரு டார்ச் விளக்குடன் வேனில் பார்த்தேன், நான் திகிலடையும் விதமாக, எமிலியின் சிறிய உடல் வேனின் அடியில் சிக்கியிருப்பதைக் கண்டேன். “நாம் எமிலியின் மேல் இருந்து வேனைத் தூக்க வேண்டும்” என்று நான் விரக்தியுடன் கூப்பிட்டேன். கூரையைப் பிடித்து இழுத்தேன். இன்னும் சிலர் மட்டுமே தூக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் வேன் அதிசயமாக அதன் சக்கரங்களில் நின்றது, எமிலியின் உயிரற்ற உடலை வெளிக்காட்டியது.

எமிலி மூச்சு விடவில்லை. அவள் முகம் ஊதா நிற பிளம் பழம் போல இருந்தது. நான், “நாம் அவளுக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும்” என்றேன். ஒரு அன்பான நண்பரும் தொகுதி உறுப்பினரும் என்னுடன் மண்டியிட்டு, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் அவளை வாழுமாறு கட்டளையிட்டோம். அந்த நேரத்தில், எமிலி நீண்ட மூச்சை இழுத்தாள்.

மணிக்கணக்காகத் தோன்றிய அதன் பிறகு, இறுதியாக ஆம்புலன்ஸ் வந்தது. எமிலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அவளுக்கு நுரையீரல் நசுங்கி, முழங்காலில் தசைநார் துண்டிக்கப்பட்டு இருந்தது. அவள் ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்த நேரத்தின் காரணமாக மூளை பாதிப்பு ஒரு கவலையாக இருந்தது. எமிலி ஒன்றரை நாட்களாக கோமா நிலையில் இருந்தாள். நாங்கள் அவளுக்காக உபவாசம் இருந்து தொடர்ந்து ஜெபித்தோம். அவள் பூரண குணமடைய ஆசிர்வதிக்கப்பட்டாள். இன்று, எமிலி மற்றும் அவளது கணவர் கெவின், ஆறு மகள்களின் பெற்றோர்.

அதிசயமாக, மற்ற அனைவரும் வெளியேற முடிந்தது. லினெட் வயிற்றிலிருந்த குழந்தை டைசன். அவனுக்கும் எந்தத் தீங்கும் நேராமல், அடுத்த பிப்ரவரியில் பிறந்தான். எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவனது பூமிக்குரிய சரீரம் பெற்ற பிறகு, டைசன் பரலோக பிதாவிடம் வீடு திரும்பினான். அவன் எங்கள் காவல் தூதன் மகன். எங்கள் குடும்பத்தில் அவனது செல்வாக்கை நாங்கள் உணர்கிறோம், மேலும் அவனுடன் மீண்டும் வாழ காத்திருக்கிறோம்.7

எமிலியின் மேலிருந்து வேனை தூக்கியவர்கள், வேன் எடையில்லாதது போல் இருப்பதைக் கண்டனர். எமிலியின் உடலில் இருந்து வாகனத்தை தூக்க பரலோக தூதர்கள் பூமியின் தூதர்களுடன் இணைந்திருந்தார்கள் என நான் அறிவேன். பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வல்லமையால் எமிலி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதையும் நான் அறிவேன்.

கர்த்தர் தம்முடைய ஊழியர்களுக்கு இந்த சத்தியத்தை வெளிப்படுத்தினார்: “நான் உங்களுக்கு முன்போவேன். நான் உங்களுடைய வலதுபாரிசத்திலும் இடது பாரிசத்திலுமிருப்பேன், என்னுடைய ஆவி உங்களுடைய இருதயங்களிலே இருக்கும், உங்களைத் தாங்கிக்கொள்ள என்னுடைய தூதர்கள் உங்களைச் சுற்றிலுமிருப்பார்கள்.”8

“தேவ குமாரனின் முறைமையின்படி அது பரிசுத்த ஆசாரியத்துவமாகும்,”9 மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம்-அதன் திறவுகோல்கள், அதிகாரம் மற்றும் வல்லமையுடன் இந்த, கடைசி நாட்களில் பூமிக்கு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என நான் சாட்சியமளிக்கிறேன். எல்லா சூழ்நிலைகளும் நாம் எதிர்பார்க்கும் மற்றும் ஜெபிப்பது போல் மாறவில்லை என்றாலும், தேவனின் அற்புதங்கள் எப்போதும் அவருடைய சித்தம், அவருடைய நேரம் மற்றும் நமக்கான அவரது திட்டத்தின் படி வரும் என்பதை நான் அறிவேன்.

அற்புதங்கள் மற்றும் தூதர்களின் ஊழியம் உட்பட ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்களை நீங்கள் விரும்பினால், தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்த உடன்படிக்கைகளின் பாதையில் நடக்க உங்களை அழைக்கிறேன். உங்களை நேசிக்கும் சபையின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அடுத்த படியை எடுக்க உங்களுக்கு உதவுவார்கள்.

தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்து, ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்துக் கொண்டு செயல்படும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மூலம் அவருடைய சபையை வழிநடத்துகிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவர் உண்மையானவர். நம்மைக் குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், வீட்டிற்கு அழைத்து வரவும் இரட்சகர் தம் உயிரைக் கொடுத்தார்.

அற்புதங்கள் நின்றுவிடவில்லை, தூதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள், பரலோகம் உண்மையிலேயே திறந்திருக்கிறது என்று நான் சாட்சி கூறுகிறேன். மற்றும் அவைகள் எவ்வளவு திறந்துள்ளன! இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.