பொது மாநாடு
அவர்களால் ஜெயங்கொள்ளமுடியாது; நம்மால் விழமுடியாது
ஏப்ரல் 2021 பொது மாநாடு


அவர்களால் ஜெயங்கொள்ளமுடியாது; நம்மால் விழமுடியாது

இயேசு கிறிஸ்துவின் மேல் நம் அஸ்திபாரத்தை நாம் கட்டியெழுப்பினால், நாம் விழ முடியாது!

நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன் நமது கடந்த பொது மாநாட்டில் கூறினார்: “இந்த ஆபத்தான காலங்களில், தேவனின் திட்டத்தின் மீதான தாக்குதல்களை மறைக்க சாத்தான் இனியும் முயற்சிக்கவில்லை என அப்போஸ்தலனாகிய பவுல் தீர்க்கதரிசனம் கூறினான். துணிச்சலான தீமை நிறைந்துள்ளது. ஆகையால், ஆவிக்குரிய ரீதியில் பிழைப்பதற்கான ஒரே வழி, தேவன் நம் வாழ்வில் ஜெயங்கொள்ள அனுமதிக்க தீர்மானிக்கவேண்டும், அவருடைய குரலைக் கேட்க கற்றுக்கொள்ளவேண்டும், இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க நமது ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.”1

தேவனின் குரலைக் கேட்க கற்றுக்கொள்ள தீர்க்கதரிசியின் அழைப்பை நாம் கருத்தில் கொள்ளும்போது, நம் இருதயங்கள் தீர்மானமாயிருக்கிறதா அல்லது கடினமாக்கப்படுகிறதா? யாக்கோபு 6:6ல் கொடுக்கப்பட்டிருக்கிற ஆலோசனையை நாம் நினைவுகூர்வோமாக: “ஆம், இன்றைக்கு, அவருடைய சத்தத்தை நீங்கள் கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதேயுங்கள், நீங்கள் ஏன் மரித்துப்போக வேண்டும்?” தேவன் நம் வாழ்வில் ஜெயங்கொள்ள விட நாம் தீர்மானிப்போம்.

நம் வாழ்வில் சத்துருவல்லாமல், தேவன் எவ்வாறு ஜெயங்கொள்ள அனுமதிக்க முடியும்? “ஆகவே, சிறுமந்தையே பயப்படாதே; நன்மை செய், பூமியும் நரகமும் உனக்கு விரோதமாக திரண்டாலும், நீங்கள் என் கன்மலையின் மேல் கட்டப்பட்டிருந்தால் அவைகளால் மேற்கொள்ளமுடியாது” என கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:34ல் நாம் வாசிக்கிறோம். இது ஒரு குறிப்பிடத்தக்க வாக்குறுதியாகும். பூமியும் நரகமும் நமக்கு எதிராக ஒன்றிணைந்தாலும், நம்முடைய வாழ்க்கையை அவருடைய பாறையின் மீது நிலைநிறுத்துவதன் மூலம் தேவன் ஜெயங்கொள்ள அனுமதிக்க நாம் தேர்ந்தெடுத்தால் அவை மேற்கொள்ள முடியாது.

தம்முடைய சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து பேசுகையில், புதிய ஏற்பாட்டின் மத்தேயு 7ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, ஒரு புத்தியுள்ள மனிதனையும் ஒரு புத்தியில்லாத மனிதனையும்பற்றி அவர் போதித்தார். புத்தியுள்ள மனிதன் மற்றும் புத்தியில்லாத மனிதன்”2 என்ற ஆரம்பவகுப்பு பாடலை உங்களில் அநேகர் கேட்டிருப்பீர்கள். பாடலின் நான்கு பத்திகளை ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் நேரம் எடுத்திருந்தால், 1 மற்றும் 2 பத்திகள், 3 மற்றும் 4 பத்திகளுடன் மிகவும் ஒத்திருப்பதைக் காண்பீர்கள். புத்தியுள்ள மனிதன் மற்றும் புத்தியில்லாத மனிதன் இருவரும் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டை கொடுக்க விரும்புகிறார்கள். உங்களையும் என்னையும் போலவே ஒரு குடும்பமாக என்றென்றும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ அவர்கள் விரும்புகிறார்கள். சுற்றியுள்ள சூழ்நிலை ஒரே மாதிரியாக இருந்தது, “மழை பெய்தது, வெள்ளம் வந்தது.” அந்தப் பாடலைப் பாடும்போது ஆறு முறை நாம் பாடுகிறோம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், புத்தியுள்ள மனிதன் தன் வீட்டை பாறையின் மீது கட்டினான், வீடு அசையாமல் நின்றது, அதே சமயம் புத்தியில்லாத மனிதன் மணல்மீது அவனுடைய வீட்டைக் கட்டினான், அவனுடைய வீடு அடித்துச் செல்லப்பட்டது. ஆகவே, நம்முடைய அஸ்திபாரம் எங்குள்ளது என்பது உண்மையில் முக்கியமானது, இது முடிவாகவும், நித்தியமாகவும் விளைவின் மீது தீர்க்கமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது.

நமது எதிர்கால வாழ்க்கையை அமைக்கும்போது நாம் அனைவரும் உறுதியான அஸ்திபாரத்தின்மேல் இருப்போம் என்று நான் நம்புகிறேன், ஜெபிக்கிறேன். “மேலும் இப்பொழுதும் என் குமாரரே நினைவுகூருங்கள், தேவகுமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின்மேல் நீங்கள் உங்கள் அஸ்திபாரத்தை கட்டவேண்டுமென்று நினைவில்கொள்ளுங்கள், பிசாசு தன் பலத்த காற்றுக்களையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும், அனுப்பி ஆம், அவன் சகல கன்மழையாலும், அவனுடைய பலத்த புயலாலும் உங்களை அடிக்கும்போது, அது உங்களை பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற கன்மலை மெய்யான அஸ்திபாரமாயிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தின்மேல் மனுஷன் கட்டினால் அவர்கள் விழுந்துபோவதில்லை” என ஏலமன் 5:12ல் நாம் நினைவுபடுத்தப்படுகிறோம்.

அதுவே தேவனிடமிருந்து வரும் வாக்குறுதி! இயேசு கிறிஸ்துவின் மேல் நம் அஸ்திபாரத்தை நாம் கட்டியெழுப்பினால், நாம் விழ முடியாது! உண்மையுள்ளவர்களாக முடிவுபரியந்தம் நாம் நிலைத்திருக்கும்போது, அவருடைய கன்மலையின்மீது நமது வாழ்க்கையை ஸ்தாபிக்க தேவன் நமக்கு உதவுவார், பாதாளம் நமக்கெதிராக நிலைப்பதில்லை (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:69). வரவிருக்கும் அனைத்தையும் நம்மால் மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் வரவிருப்பவைகளுக்கு நாம் எவ்வாறு ஆயத்தமாயிருக்கிறோம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கலாம்.

“சுவிசேஷம் நல்லது, எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது இதை நம் வாழ்வில் வைக்க வேண்டும்” என்று நம்மில் சிலர் நினைக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை சபைக்குச் செல்வது பாறை மீது கட்ட போதுமானதாக இல்லை. நம்முடைய முழு வாழ்க்கையும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் நிரப்பப்பட வேண்டும். சுவிசேஷம் நம் வாழ்வின் ஒரு பகுதி அல்ல, ஆனால் நம் வாழ்க்கை உண்மையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒரு பகுதியாகும். இதைப்பற்றி சிந்தியுங்கள். இது உண்மையில்லையா? இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் முழு திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே நமது அநித்திய வாழ்க்கை.

தேவனே நமது பரலோக பிதா. அவர் நம் அனைவரையும் நேசிக்கிறார். நம்மை நாமே அறிவதை விட நம்முடைய சாத்தியமான வழியை அவர் நன்கு அறிவார். நம் வாழ்வின் விவரங்கள் மட்டுமே அவருக்குத் தெரிந்தவை அல்ல. நம் வாழ்வின் விவரங்களின் விவரங்களை தேவன் அறிவார்.

நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசி, தலைவர் நெல்சனின் புத்திசாலித்தனமான ஆலோசனையை தயவுசெய்து பின்பற்றுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:5–6ல் பதிவு செய்யப்பட்டுள்ளதைப்போல:

“ஏனெனில், எல்லா பொறுமையிலும் விசுவாசத்திலும் எனது வாயிலிருந்து வருவதாகவே, அவனது வார்த்தையை நீங்கள் பெறுவீர்கள்.

“ஏனெனில் இந்தக் காரியங்களைச் செய்வதால், பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொள்ளாது; ஆம், உங்களுக்கு முன்பாக அந்தகாரத்தின் வல்லமைகளை கர்த்தராகிய தேவன் சிதறடிக்கப்பண்ணி, உங்கள் நன்மைக்காகவும், அவரது நாம மகிமைக்காகவும் வானங்களை அசையப்பண்ணுவார்.”

அந்த காரணத்திற்காக, அவர்களால் மேற்கொள்ள முடியாது, நாம் விழ முடியாது!

கிறிஸ்து முதன்முதலில் செய்ததைப் போல இரண்டாவது முறையாக மீண்டும் அவர் வருவார் என்று நான் உங்களுக்கு சாட்சியமளிக்கிறேன், ஆனால் இந்த முறை அது மிகுந்த மகிமையுடனும் கம்பீரத்துடனும் இருக்கும். திரையின் இந்த பக்கத்திலோ அல்லது மறுபக்கத்திலோ அவரை வரவேற்க நான் தயாராக இருப்பேன் என்று நான் நம்புகிறேன், ஜெபிக்கிறேன். இந்த அற்புதமான ஈஸ்டர் நேரத்தை நாம் கொண்டாடும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை மூலம் (மரோனி 7:41 பார்க்கவும்) நான் மேலே சென்று என் சிருஷ்டிகரை சந்தித்து “உமக்கு நன்றி” என சொல்ல முடியுமென்று என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Let God Prevail,” Liahona, Nov. 2020, 95.

  2. “The Wise Man and the Foolish Man,” Children’s Songbook, 281.