பொது மாநாடு
“இதோ! நான் அதிசயங்களைப் பிறப்பிக்கிற தேவன்”
ஏப்ரல் 2021 பொது மாநாடு


“இதோ! நான் அதிசயங்களைப் பிறப்பிக்கிற தேவன்”

அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிடையே, உங்கள் வாழ்க்கையிலும் என்னுடையதிலும் ஏராளமாக உள்ளன.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இன்று உங்கள் முன் நிற்பது என்ன ஒரு பாக்கியம். இந்த மாநாட்டில் ஏற்கனவே உரையாற்றியவர்களுடன் இணைந்து, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதற்கு நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன். அவர் தனது சபையை வழிநடத்துகிறார்; அவர் தனது தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனுடன் பேசுகிறார், மற்றும் அவர் பரலோக பிதாவின் எல்லா பிள்ளைகளையும் நேசிக்கிறார்.

இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, நம்முடைய இரட்சகரும் மீட்பரும்,1வல்லமையுள்ள தேவனும், சமாதான பிரபுவாகிய,2இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நாம் நினைவுகூர்கிறோம். கடன் வாங்கிய கல்லறையில் மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உயிர்த்தெழுதலுடன் முடிவடைந்த அவரது பாவநிவர்த்தி, மனித வரலாற்றில் மிகப்பெரிய அதிசயமாக நிற்கிறது. “இதோ,” அவர் கூறினார், “நானே தேவன்; நான் அதிசயங்களைப் பிறப்பிக்கிற தேவன்.”3

“கிறிஸ்து பரலோகத்துக்கு ஏறி, தேவனுடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்ததினிமித்தம் அற்புதங்கள் ஓய்ந்து போனதோ,”4 என மார்மன் தீர்க்கதரிசி மார்மன் புஸ்தகத்தில் கேட்கிறான். அவன் பதிலளிக்கிறான், “அப்படியல்லவே, மனுபுத்திரருக்குள்ளே தூதர்களும் பணிவிடை செய்வதிலிருந்து ஓய்ந்து போகவில்லை.”5

சிலுவையில் அறையப்பட்டதைத் தொடர்ந்து, கர்த்தருடைய தூதன் மரியாளுக்கும், இயேசுவின் சரீரத்துக்கு எண்ணெய் பூச கல்லறைக்குச் சென்ற, வேறு சில பெண்களுக்கும் தோன்றினான். தூதன் சொன்னான்:

“உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?6

“அவர் இங்கே இல்லை; அவர் உயிர்த்தெழுந்தார்.”7

மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி அபிநாதியின் புஸ்தகம் அந்த அதிசயத்தைப்பற்றி அறிவித்தது:

“கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழாவிட்டால், …உயிர்த்தெழுதலும் இல்லாமற்போயிருக்கும்.

“ஆனால் உயிர்த்தெழுதல் இருப்பதால் கல்லறை ஜெயங்கொள்ளுகிறதில்லை, மரணத்தின் கொடுக்கு கிறிஸ்துவில் விழுங்கப்படுகிறது.”8

இயேசு கிறிஸ்துவின் அற்புதமான செயல்கள் ஆரம்பகால சீஷர்கள் வியக்க காரணமாக அமைந்தன: “இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே.”9

ஆரம்பகால அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து, அவர் சுவிசேஷத்தைக் கற்பிப்பதைக் கேட்டபோது, அவர்கள் பல அற்புதங்களைக் கண்டார்கள். “குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது,” என்பதை அவர்கள் பார்த்தார்கள்.10

அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிடையே, உங்கள் வாழ்க்கையிலும் என்னுடையதிலும் ஏராளமாக உள்ளன. அற்புதங்கள் என்பது தெய்வீக செயல்கள், வெளிப்பாடுகள் மற்றும் தேவனின் எல்லையற்ற வல்லமையின் தெரிவித்தல்கள் மற்றும் அவர் “நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவர்” என்பதை உறுதிப்படுத்துவதாகும்.11 சமுத்திரங்களை உருவாக்கிய இயேசு கிறிஸ்து அவைகளை அமைதிப்படுத்த முடியும்; பார்வையற்றவர்களுக்கு பார்வை கொடுத்தவர் நம் பார்வைகளை பரலோகத்திற்கு உயர்த்த முடியும்; தொழுநோயாளிகளைச் சுத்தப்படுத்தியவர் நம்முடைய பலவீனங்களை சரிசெய்ய முடியும்; பலவீனமான மனிதனைக் குணப்படுத்தியவர், “என் பின்னே வா,”என்று எழும்ப நம்மை அழைக்க முடியும்.12

உங்களில் பலர் அற்புதங்களை கண்டிருக்கிறீர்கள், நீங்கள் உணர்ந்ததை விட அதிகமாக. இயேசு மரித்தவர்களை உயிரோடு எழுப்புவதோடு ஒப்பிடுகையில் அவை சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அது தேவனிடமிருந்து வந்ததால், அதன் அளவு ஒரு அதிசயத்தை வேறுபடுத்துவதில்லை. அற்புதங்கள் வெறுமனே தற்செயல் நிகழ்வுகள்தான் அல்லது அதிர்ஷ்டம் மட்டுமே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நேபி தீர்க்கதரிசி “ஆதாயத்தைப் பெறவும், தங்கள் சொந்தக் கல்வியையும், தங்கள் ஞானத்தையும் தங்களுக்குள்ளே பிரசங்கித்து, தேவனுடைய அற்புதங்களையும் அதிகாரத்தையும் புறக்கணிக்கிற,”அவர்களைக் கண்டித்தான்.13

“இரட்சிக்க வல்லவரால்” தெய்வீக வல்லமையால் அற்புதங்கள் செய்யப்படுகின்றன.14 அற்புதங்கள் தேவனின் நித்திய திட்டத்தின் நீடிப்புகள்; அற்புதங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒரு உயிர்நாடி.

கடந்த இலையுதிர்காலத்தில் சகோதரி ராஸ்பான்டும் நானும் யூட்டாவின் கோஷனுக்குச் சென்று கொண்டிருந்தோம், உலகளாவிய நேருக்கு நேர் நிகழ்வு 16 வெவ்வேறு மொழிகளில் 600,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.15 உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் சமர்ப்பித்த கேள்விகளுடன் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதே இந்த நிகழ்ச்சி. சகோதரி ராஸ்பான்டும் நானும் தனிப்பட்ட முறையில் கேள்விகளை மதிப்பாய்வு செய்தோம்; ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி, நம் வாழ்வில் வெளிப்படுத்தலின் வல்லமை, நடந்துகொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம், மற்றும் நாம் பொக்கிஷப்படுத்தும் சத்தியங்கள் மற்றும் கட்டளைகளைக் குறித்து சாட்சியளிக்க அவர்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தனர். இன்று கேட்கும் பலர் அந்த அதிசய நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர்.

ஆரம்பத்தில் இந்த ஒளிபரப்பு, நியூயார்க்கின் புறநகரில் உள்ள ஜோசப் ஸ்மித் சாட்சி அளித்த, பரிசுத்த தோப்பில் தொடங்கவிருந்தது: “அவர்களின் பிரகாசமும் மகிமையும் எல்லா விளக்கத்தையும் மீறிய, எனக்கு மேலே காற்றில் நின்ற, இரண்டு நபர்களைக் கண்டேன். அவர்களில் ஒருவர் என்னிடம் பேசினார், என்னைப் பெயர் சொல்லி அழைத்து சொன்னார், அடுத்தவரைக் காட்டி—இவர் என் நேச குமாரன். அவருக்குச் செவி கொடு16 சகோதர சகோதரிகளே, அது ஒரு அற்புதம்.

படம்
கோஷன், யூட்டாவில் எருசலேம் அமைக்கப்பட்டது

உலகளாவிய தொற்றுநோய், யூட்டாவின் கோஷனுக்கு இடமாற்றம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது, அங்கு, பழைய எருசலேமின் ஒரு பகுதியை படப்பிடிப்பிற்காக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மீண்டும் உருவாக்கியது. சகோதரி ராஸ்பான்டும் நானும் கோஷனிலிருந்து சில மைல்களுக்குள், அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எங்கள் இலக்கின் திசையிலிருந்து அடர்த்தியான புகை வருவதைக் கண்டோம். இப்பகுதியில் காட்டுத் தீ எரிந்தது, ஒளிபரப்பு ஆபத்தில் இருக்கக்கூடும் என்று நாங்கள் கவலைப்பட்டோம். நிச்சயமாக, 6:00க்கு இருபது நிமிடங்களுக்கு முன் எங்கள் ஒளிபரப்பு நேரம், முழு வளாகத்திலும் உள்ள மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் இல்லை. ஒளிபரப்பு இல்லை. ஒரு ஜெனரேட்டர் இருந்தது, சிலர் நாம் மின்சாரம் பெற முடியும் என்று நினைத்தார்கள், ஆனால் கையிலிருந்த அதிநவீன உபகரணங்களுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

படம்
நெருப்பிலிருந்து புகை

நிகழ்ச்சியிலிருந்த நாங்கள் அனைவரும், வர்ணனையாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட, எனது சொந்த குடும்பத்தின் 20 இளைஞர்கள் கூட, நடக்கவிருப்பதில் முழுமையாக ஈடுபட்டோம். நான் அவர்களின் கண்ணீர் மற்றும் குழப்பத்திலிருந்து விலகி, ஒரு அதிசயத்திற்காக கர்த்தரிடம் மன்றாடினேன். நான் ஜெபித்தேன், “பரலோக பிதாவே, நான் ஒரு அதிசயத்தை அரிதாகவே கேட்டிருக்கிறேன், ஆனால் இப்போது ஒன்றைக் கேட்கிறேன். இந்த சந்திப்பு உலகெங்கிலும் உள்ள எங்கள் இளைஞர்கள் அனைவருக்காகவும் நடக்க வேண்டும். அது உமது சித்தமாக இருந்தால் தொடர்ந்து நடத்த எங்களுக்கு மின்சாரம் தேவை. ”

6:00க்குப் பிறகு ஏழு நிமிடங்கள் கழித்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது போலவே, அது மீண்டும் வந்தது. இசை மற்றும் ஒலிவாங்கிகள் முதல் வீடியோக்கள் மற்றும் அனைத்து ஒலிபரப்பு சாதனங்கள் வரை அனைத்தும் வேலை செய்யத் தொடங்கின. நாங்கள் கிளம்பினோம், ஓடினோம். நாங்கள் ஒரு அதிசயத்தை அனுபவித்தோம்.

படம்
நேருக்கு நேர் நிகழ்வின் போது இசை நிகழ்ச்சி

சகோதரி ராஸ்பான்டும் நானும் அன்று மாலை காரில் வீடு திரும்பும்போது, தலைவர் மற்றும் சகோதரி நெல்சனும் இந்த செய்தியை எங்களுக்கு அனுப்பினர்: “ரான், மின்சாரம் போனதை நாங்கள் கேள்விப்பட்டவுடன், ஒரு அதிசயத்திற்காக நாங்கள் ஜெபித்தோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

பிற்கால வேதத்தில் இது எழுதப்பட்டுள்ளது: “கர்த்தராகிய நான் வானத்தின் வல்லமைகளை கொடுக்க என் கையை நீட்டினேன்; நீங்கள் இப்போது அதைக் காண முடியாது, இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் அதைக் காண்பீர்கள், நான் இருக்கிறேன் நான் வந்து என் ஜனத்தை ஆளுகை செய்வேன், என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”17

சரியாக அதுதான் நடந்தது. கர்த்தர் தன் கரத்தை வைத்தார், மின்சாரம் வந்தது.

தலைவர் நெல்சன் கடந்த அமர்வில் நமக்கு மிகவும் வல்லமையான முறையில் கற்பித்தது போல, அற்புதங்கள் விசுவாசத்தின் வல்லமையால் செய்யப்படுகின்றன. தீர்க்கதரிசி மரோனி ஜனங்களுக்கு புத்தி சொன்னான், “மனுபுத்திரருக்குள்ளே விசுவாசம் இல்லையென்றால், தேவன் அவர்களுக்குள் எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது. ஆதலால் அவர்களுக்குள் விசுவாசம் உண்டாகும்வரை அவர் தம்மைக் காண்பிக்கவில்லை.”

அவன் தொடர்ந்தான்:

“இதோ, ஆல்மா, அமுலேக்கின் விசுவாசமே அந்த சிறைச்சாலையை பூமியில் நொறுங்கி விழப்பண்ணியது.

“இதோ, நேபி, லேகியின் விசுவாசமே லாமானியர்கள் அக்கினியாலும் பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் பெறத்தக்கதான மாற்றத்தை அவர்கள் மேல் கொண்டு வந்தது.

“இதோ, அம்மோன் மற்றும் அவனது சகோதரரின் விசுவாசமே லாமானியர்களிடையே பெரும் அற்புதத்தைச் சம்பவிக்கப்பண்ணியது. …

அவர்களுக்குள் விசுவாசம் உண்டாகும்வரை எப்பொழுதும் எந்த அற்புதமும் செய்யப்படவில்லை; ஆகையால் அவர்கள் முதலில் தேவ குமாரனை நம்பினார்கள்.”18

நான் அந்த வசனங்களின் தொடர்ச்சியாக சேர்க்க முடியும், “ஆர்வமுள்ள இளம் வயதுவந்த கலைஞர்கள், ஒளிபரப்பு வல்லுநர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஒரு அப்போஸ்தலர் மற்றும் தேவனின் தீர்க்கதரிசி ஆகியோரின் நம்பிக்கையே மிகப் பெரிய அற்புதத்தை நாடியது, யூட்டாவின் கோஷனில் அமைக்கப்பட்ட ஒரு தொலைதூர திரையரங்குக்கு மின்சாரம் மீட்கப்பட்டது.”

ஜெபத்துக்கு விடையாக அற்புதங்கள் வரலாம். அவை எப்போதும் நாம் கேட்பது அல்லது நாம் எதிர்பார்ப்பது அல்ல, ஆனால் நாம் கர்த்தரை நம்பும்போது, அவர் அங்கே இருப்பார், அவர் சரியாக அங்கே இருப்பார். அற்புதத்தை நமக்குத் தேவையான தருணத்திற்கு ஏற்றபடி அவர் பொருத்துவார்.

கர்த்தர் தம்முடைய வல்லமை, நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு, பரலோகத்திலிருந்து நம்முடைய உலக அனுபவத்தில் சேருவது, மற்றும் மிகவும் மதிப்புமிக்கவற்றைப் போதிப்பதற்கான அவரது விருப்பத்தை நினைவூட்டுவதற்காக அற்புதங்களைச் செய்கிறார். 1831 ஆம் ஆண்டில் பரிசுத்தவான்களிடம் அவர் சொன்னார், “என்மீது நம்பிக்கை வைத்திருப்பவர் குணமடைவார்,” மேலும் அந்த வாக்குறுதி இன்றும் தொடர்கிறது, “மரணத்திற்கு நியமிக்கப்படாதவர் குணமாக்கப்படுவார்.“19 பரலோகத்தில் கட்டளையிடப்பட்ட சட்டங்கள் உள்ளன, நாம் எப்போதும் அவற்றுக்கு உட்பட்டவர்கள்.

அன்புக்குரியவரை குணமாக்குவதற்கும், அநியாயமான செயலைத் தடுப்பதற்கும், கசப்பான அல்லது ஏமாற்றமடைந்த ஆத்துமாவின் இருதயத்தை மென்மையாக்குவதற்கும் ஒரு அற்புதத்தை நாம் எதிர்பார்க்கும் நேரம் உண்டு. உலகப்பிரகார கண்களால் விஷயங்களைப் பார்க்கும்போது, உடைந்ததை சரிசெய்ய கர்த்தர் தலையிட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். விசுவாசத்தின் மூலம், அதிசயம் நம் கால அட்டவணையில் அல்லது நாம் விரும்பிய தீர்மானத்துடன் வருவது அவசியமில்லை என்றாலும் வரும். நாம் உண்மையுள்ளவர்களைக் காட்டிலும் குறைவானவர்கள் அல்லது அவருடைய தலையீட்டிற்கு தகுதியற்றவர்கள் என்று அர்த்தமா? இல்லை. நாம் கர்த்தருக்கு பிரியமானவர்கள். அவர் நமக்காக தம் ஜீவனைக் கொடுத்தார், நாம் மனந்திரும்பி அவரிடம் நெருங்கி வரும்போது அவருடைய பாவநிவர்த்தி தொடர்ந்து சுமைகளிலிருந்தும் பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறது.

கர்த்தர் நமக்கு நினைவூட்டினார், “உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல.”20 அவர் கொடுக்கிறார், “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,”21 துயரம், ஏமாற்றம், பயம், கீழ்ப்படியாமை, அன்புக்குரியோர் மீது அக்கறை, தொலைத்த அல்லது நொறுங்கிய கனவுகளிலிருந்து ஓய்வு. குழப்பம் அல்லது துக்கத்தின் மத்தியில் அமைதி என்பது ஒரு அற்புதம். கர்த்தருடைய வார்த்தைகளை நினைவில் வையுங்கள்: “இந்த விஷயத்தில் நான் உங்கள் மனதில் அமைதியைப் பேசவில்லையா? தேவனிடமிருந்து இதைவிட என்ன பெரிய சாட்சி உங்களுக்கு இருக்க முடியும்?”22 அற்புதம் என்னவென்றால், உன்னதமானவரின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து, மாபெரும் யேகோவா சமாதானத்துடன் பதிலளிக்கிறார்.

அவளை பெயர் சொல்லி அழைத்து, அவர் தோட்டத்திலிருந்த மரியாளுக்குத் தோன்றியதைப் போலவே, நம்முடைய விசுவாசத்தைப் பயன்படுத்தும்படி அவர் நம்மை அழைக்கிறார். மரியாள் அவருக்கு சேவை செய்யவும் அவரை கவனிக்கவும் விரும்பினாள். அவருடைய உயிர்த்தெழுதல் அவள் எதிர்பார்த்தது அல்ல, ஆனால் அது மகிழ்ச்சியின் மாபெரும் திட்டத்தின்படி ஆகும்.

“சிலுவையிலிருந்து இறங்கி வா,”23 என அவிசுவாசிகளின் கூட்டத்தார் கல்வாரியில் அவரைக் கேலி செய்தார்கள். அவர் அத்தகைய அற்புதத்தை செய்திருக்க முடியும். ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிந்திருந்தார், மேலும் அவர் தனது பிதாவின் திட்டத்திற்கு உண்மையாக இருக்க விரும்பினார். அந்த உதாரணத்தை நாம் இழக்கக்கூடாது.

பாடுகளின் சமயத்தில் நமக்கு அவர் சொன்னார், “என் விலாவை ஊடுருவிய காயங்களையும், என் கைகளிலும் கால்களிலும் ஆணித்தழும்புகளையும் பார். விசுவாசமாயிரு, என் கட்டளைகளைக் கைக்கொள், நீ பரலோக இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வாய்.“24 சகோதர சகோதரிகளே, நம் அனைவருக்கும் அது வாக்குறுதியளிக்கப்பட்ட அற்புதம்.

இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, நம்முடைய கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் அற்புதத்தை கொண்டாடும்போது, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக, உங்கள் வாழ்க்கையில் மீட்பரின் வல்லமையை நீங்கள் உணருவீர்கள், நமது பரலோக பிதாவிடம் உங்கள் வேண்டுகோள்கள், இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழியம் முழுவதும் காட்டிய அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பதிலளிக்கப்படும் என்பதற்கான எனது ஆசீர்வாதத்தை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். வரவிருக்கும் எல்லாவற்றிலும் உறுதியுடனும் உண்மையுடனும் நிற்க நான் ஜெபிக்கிறேன். அது கர்த்தருடைய சித்தமாக இருந்தால். கோஷனில் நாங்கள் அனுபவித்ததைப் போல அற்புதங்கள் உங்களுக்கும் வரும் என்று நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். “பிதாவாகிய தேவனுடைய கிருபையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், அவர்களைக் குறித்து சாட்சி கொடுக்கிற பரிசுத்த ஆவியானவரின் கிருபையும், வந்து உங்களிடத்தில் நிலைத்திருக்கும்படி, தீர்க்கதரிசிகளாலும் அப்போஸ்தலர்களாலும் எழுதப்பட்டிருக்கிற இந்த இயேசுவை நீங்கள் நாடி,” உங்கள் வாழ்க்கையில் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்.25 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.